இதுதான் சென்னை ஓஎம்ஆர் சாலை.. அடையாறு டூ சோழிங்கநல்லூர் 1.50 மணி நேரம்.. நெட்டிசன் வெளியிட்ட பதிவு
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி எக்ஸ்பிரஸ்வே அல்லது பழைய மகாபலிபுரம் சாலை என அழைக்கப்படும் சென்னை ஓஎம்ஆர் சாலை தான் தமிழ்நாட்டிற்கே ஐடி ஹப் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அங்கு ஐடி நிறுவனங்கள் உள்ளன. சென்னை ஓஎம்ஆர் சாலை, அதன் அருகில் உள்ள ரேடியல் சாலை, சோழிங்கநல்லுர், நாவலூர் சிப்காட், கந்தன்சாவடி எம்ஜிஆர் சாலை பகுதியில் தான் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையில் பயணிக்கும் மக்களின் கவலையை ஒருவர் வெளிப்படுத்தி உள்ளார். அதனை பார்ப்போம்.
தமிழ்நாட்டிலேயே பணக்கார தொகுதி என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் தொகை உள்ள தொகுதி..தமிழ்நாட்டிலேயே இவ்வளவு ஐடி நிறுவனங்கள் ஒரு தொகுதியில் இல்லை.. மொத்த சென்னைக்கும் இதுதான் ஐடி வேலைகளை அள்ளி வழங்கி வருகிறது. அந்த தொகுதி எது என்றால் சோழிங்கநல்லூர் தொகுதி தான். இந்த தொகுதியில் உள்ள அத்தனை சாலைகளுமே சென்னையின் காஸ்ட்லியான சாலைகள் ஆகும். இடம் வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.. ஏனெனில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

சென்னையின் முதல் ஐடி கேரிடார் இதுதான். இந்த ஐடி கேரிடார் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 20 வருடங்களில் கற்பனைக்கு எட்டாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நட்சத்திர ஓட்டல்கள், உலகப்புகழ் பெற்ற ஐடி நிறுவனங்கள், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள், உணவகங்கள், மிகத்தரமான சாலைகள் என பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கும். ஆனால் சாலையில் பயணிப்பது எனப்து மிகவும் வேதனையான ஒன்றாக உள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதி முழுக்க சாலைகளும் சரி, கழிவுநீர் கட்டமைப்புகள், மழை நீர் கட்டமைப்புகளும் மோசமாக உள்ளது என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
அதேநேரம் இன்னொரு பிரச்சனை போக்குவரத்து நெரிசல்.. சோழிங்கநல்லூரில் இருந்து அடையாறுக்கோ, அல்லது சோழிங்கநல்லூரில் இருந்து பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வழியாக கிண்டிக்கே செல்வது என்பது மிகவும் சவாலானது. இந்த வழித்தடம் மொத்தமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். இப்போது மெட்ரோ பணிகள் நடப்பதால் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. அதேநேரம் மெட்ரோ பணிகளோ மிகவும் மந்த கதியில் நடப்பதால் ஒருவழிப்பாதை பயணங்கள், சிக்னல்கள் இல்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஐடி பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சாலையில் பயணிக்கும் எஸ்கே என்பவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதனை அப்படியே பார்ப்போம். கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள இது ராஜீவ் காந்தி ஐடி எக்ஸ்பிரஸ்வே அல்லது பொதுவாக ஓஎம்ஆர் என்று அழைக்கப்படுகிறது. அலுவலகத்திலிருந்து பணி (WFO) கலாச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த IT கேரிடாரில் அமைந்துள்ள அலுவலகங்களுக்குப் பயணம் செய்வது பெரும் தொல்லையாக இருக்கிறது. அடையாறில் இருந்து சோழிங்கநல்லூரை அடைய 1.5 மணி நேரம் வரை ஆகிறது. மெட்ரோ கட்டுமானப் பணிகள் மற்றும் தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நிலைமையை இன்னும் மோசமாகியுள்ளது.

பேருந்து மற்றும் ஆட்டோவைத் தவிர பயணிக்க வாய்ப்புகள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட ஐடி காரிடார் பகுதியை (சென்னை ஓஎம்ஆர்) நீண்ட காலத்திற்கு முன்பே சென்னை மெட்ரோவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இங்கு பெரும்பாலான ஐடி ஊழியர்கள் டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற மெட்ரோவைப் பயன்படுத்த விரும்புவதால் இது நம்பமுடியாத அளவிற்கு அற்புதமான இடமாக அமைந்திருக்கும்.
ஆனால் ஓஎம்ஆரை விட சிறந்த போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்டுள்ள பூந்தமலி-போரூர் பைபாஸ் வழித்தடத்தை திறப்பதற்கு தான் இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதில் இன்னும் ஏமாற்றம் என்னவென்றால், அடையாறு-சோழிங்கநல்லூர் பாதையில் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சோழிங்கநல்லூரைத் தாண்டிய பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதும்தான் வேதனையான ஒன்று.. சென்னை மெட்ரோ அதிகாரிகளே தயவு செய்து ஓஎம்ஆர் இல் தூண்கள், கர்டர்கள் அமைக்கும் பணியை உடனடியாக விரைவுபடுத்துங்கள். ஏனெனில் இங்கு ஏற்படும் அசௌகரியம் நினைத்து பார்க்க முடியாத அளவில் உள்ளது. ஓஎம்ஆர் சாலையில் அலுவலகம் செல்வோருக்கு பயணம் செய்வதற்கே மொத்த எனர்ஜியும் போய்விடுகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications