திமுகவுக்கு 2 ஆப்ஷன் கொடுத்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! முந்திச் சொன்ன ஒன் இந்தியா தமிழ்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் அல்லது திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கேட்கும் திட்டத்தில் இருப்பதாக நாம் கடந்த சனிக்கிழமையன்று ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதனை இன்றைய பிரஸ்மீட்டில் உறுதி செய்திருக்கிறார் ஐ.யூ.எம்.எல். தேசியத் தலைவர் காதர் மொகிதீன்.
அதேபோல் வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை முஸ்லீம் லீக் போட்டியிட விரும்பவில்லை என்பதையும் நாம் தான் கூறியிருந்தோம். இன்று சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுக்குழுவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் காதர் மொகிதீன், தாங்கள் வேலூர் தொகுதியை திமுகவிடம் கேட்கவே இல்லை எனக் கூறிவிட்டார்.

இதன் மூலம் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் களம் காண அதிக வாய்ப்புகள் உள்ளன. இப்போதே ஏ.சி.சண்முகம் வேலூரில் தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்ட நிலையில் திமுக தரப்பிலும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதனிடையே ராமநாதபுரம் தொகுதி தான் தங்கள் முதல் விருப்பம் என்றும் முடிந்தவரை அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடவே திமுகவிடம் விருப்பம் தெரிவிப்போம் என காதர் மொகிதீன் கூறியுள்ளார். ஒரு வேளை அதனை திமுக யோசிக்கும் பட்சத்தில் தங்களது அடுத்த சாய்ஸ் திருச்சி நாடாளுமன்ற தொகுதி என்பதையும் காதர் மொகிதீன் மிக கிளியராக சொல்லிவிட்டார். இதனை தான் நாம் கடந்த சனிக்கிழமை அன்று ''திருச்சி மக்களவைத் தொகுதி யாருக்கு? முஸ்லீம் லீக் Vs காங்கிரஸ்? நெருங்கும் தேர்தல்! பரபரக்கும் களம்!'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
திருச்சி மக்களவைத் தொகுதிக்குள் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகள் வருவதால் சிறுபான்மையினர் வாக்குகளை எளிதாக அறுவடை செய்ய முடியும் என்பது ஒரு கணக்காக இருந்தாலும் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ், மெய்யநாதன், ரகுபதி, ஆகியோர் வெற்றியை எளிதாக்குவார்கள் என்பது மற்றொரு கணக்கு.
மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீனின் சொந்த ஊர் திருச்சி என்பது கூடுதல் தகவலாகும்,












Click it and Unblock the Notifications