ஜெ.அன்பழகன் மகன் ராஜாவை தீவிர அரசியலுக்கு அழைக்கும் ஆதரவாளர்கள்...!
சென்னை: மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மகன் ராஜாவை தீவிர அரசியலுக்கு வருமாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகவும், திமுக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த ஜெ.அன்பழகனின் இழப்பை அக்கட்சியின் தலைமை பேரிழப்பாகவே கருதுகிறது. ஜெ.அன்பழகன் விட்டுச்சென்ற வெற்றிடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்பது அவரது ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.
இதனிடையே ஜெ.அன்பழகன் மறைந்து இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது மகன் ராஜாவை தொடர்பு கொள்ளும் ஆதரவாளர்கள் அவரை தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர். உங்கள் தந்தையை போல் நீங்களும் சென்னை மேற்கு மாவட்டத்தில் அரசியல் செய்ய வேண்டும் என அவரை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்த ஆர்.டி.ஓ.வுக்கு ஹைகோர்ட் ரூ50,000 அபராதம்- கண்டனம்
தனது தந்தையின் ஆதரவாளர்கள் தன்னிடம் வைக்கும் கோரிக்கையை செவி மடுத்துக்கொள்ளும் ராஜா,இன்னும் தனது தந்தை மறைந்த சோகத்தில் இருந்து மீளவில்லை. தியாகராயர் நகரில் உள்ள பழக்கடை, சினிமா விநியோகம், உள்ளிட்ட தொழில்களை கவனித்து வரும் ராஜா திமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார்.
தந்தை மாவட்டச் செயலாளராக இருந்தும் இவருக்கு எந்த பொறுப்போ, பதவியோ கட்சியில் வழங்கவில்லை. இதனிடையே இப்போது அன்பழகன் மறைந்ததால் சென்னை மேற்கு மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளர் நியமனம் செய்ய வேண்டிய நிலை திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அந்தப்பதவிக்கு ஜெ.அன்பழகனின் தீவிர ஆதரவாளரும், பகுதிச்செயலாளருமான மயிலை வேலு மற்றும் அண்ணா நகர் பரமசிவம் ஆகியோரது பெயர்கள் பேசப்படுகின்றன.