சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்... தோண்டி துருவும் மத்திய போதைப் தடுப்பு பிரிவு அதிகாரிகள்
சென்னை: ரூ.2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர். ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப் தடுப்பு பிரிவு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து சிக்கப்போகும் விஐபிக்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜாபர் சாதிக் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தியாவில் இருந்து ராகி மாவு, சத்து மாவு, தேங்காய் பவுடர், திராட்சை உலர் பழங்கள் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரினை, சர்வதேச நாடுகளுக்கு கடத்தி வந்துள்ளார்.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவு பொருட்களில், போதைப்பொருள் இருப்பது அந்நாட்டு அதிகாரிகளால் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்துதான் அந்த பார்சல் வருகிறது என்பதை உறுதிப்படுத்திய அந்நாட்டு அதிகாரிகள், டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அது தொடர்பான விசாரணையில், மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த பிப்ரவரி 15ஆம்தேதி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். அப்பொது போதைப்பொருளை ஹெல்த்மிக்ஸ் உணவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து பேக்கிங் செய்து கொண்டிருந்த, சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
குடோனில் நடத்திய சோதனையில் 50 கிலோ போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.
போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் சிக்கியதையடுத்து அவர் திமுகவில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி அதிகாரிகளால் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக் தலைமறைவானார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்டார். முதலில் அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கை 7 நாள் காவலில் எடுத்தும் என்சிபி விசாரணை நடத்தியது. 7 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் தோண்ட தோண்ட கிளம்பி வரும் பூதம் போல தொடர்புகள் சிக்கியுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 3 ஆயிரத்து 500 கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மெதம்பெடமைன் மூலப் பொருளை, சர்வதேச நாடுகளுக்கு கடத்திய ஜாபர் சாதிக், கோடிக்கணக்கில் பணம் பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு இரண்டாயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்தது தெரியவந்தது.
அந்த வகையில் ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நெருங்கிய கூட்டாளியான சதா என்ற சதானந்தம் என்பவரை கைது செய்துள்ளது. இவர் திருச்சியிலும், சென்னையிலும் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார். ஆனால், இந்த நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தி இருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து ஜாபர் சாதிக் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அய்யப்பாக்கதத்தில் உள்ள மத்திய போதைப்பொருள் அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவரை இன்று முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்துகின்றனர். மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட 7 செல்போன்களை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது.
ஜாபர் சாதிக் யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது குறித்து சைபர் கிரைம் தடயவியல் நிபுணர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் உடன் இணைந்து சிக்கப்போகும் விஐபிக்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications