“ஜெய் ஜனநாயகம்”.. சூழ்ச்சி அரங்கேறியுள்ளது.. ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது: விமர்சித்த திருமாவளவன்
சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று மிகப் பிரமாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முன்னணி அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர்கள் அயோத்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

இந்நிலையில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், பாஜக அரசு, அயோத்தி ராமர் கோவில் திறப்பு நிகழ்வை தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்வதாகவும், அயோத்தி நிகழ்வையே பிரச்சார மேடையாக்கியதாகவும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அயோத்தியில் வரலாற்றுத் திரிபு வாதம், பெரும்பான்மை ஆதிக்க வாதத்தால் வென்றுள்ளது. இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது.

இராமர் என்கிற சத்திரிய அடையாளத்தை ஆயுதமாக ஏந்தி, மோடி என்கிற வைஸ்யரைக் கொண்டு அப்பாவி சூத்திர இந்துக்களை ஏய்த்து அவர்களை வீழ்த்திய பிராமண சனாதனிகளின் அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது.
இந்துத்துவா என்னும் பெயரில் சைவம் உள்ளிட்ட பிற இந்து அடையாளங்கள் யாவற்றையும் பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி அரங்கேறியுள்ளது. இது இசுலாமியர், கிறித்தவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த தேசத்திற்கும், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கும் எதிரானது. #ஜெய்_ஜனநாயகம் #வெல்லும்_ஜனநாயகம்" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications