தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நடக்கிறது.. கொந்தளித்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: தமிழகத்தில் கருத்துரிமை இல்லை என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக உட்கட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட உட்கட்சி தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாங்காடு பேரூராட்சியில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினார்.

ஜெயக்குமார் ப்ரஸ் மீட்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ்நாடு முழுவதும் அதிமுக உட்கட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர், இனை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், பழனிச்சாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் மாங்காடு, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் 9 பொறுப்புகளுக்குத் தேர்தல் நடந்து வருகிறது.

ஜெயலலிதா இல்லம்
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் நினைவிடம் ஆக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டு நினைவிடம் ஆக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் அந்த சட்டத்திற்குத் தடை விதித்துள்ளதால் வீட்டை மீண்டும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாகச் சட்ட வல்லுநருடன் கலந்து ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும். ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றத் தீபா, தீபக் ஒத்துழைப்பைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் எங்களுக்குக் கோயில் போன்றது.

மினி எமர்ஜென்சி
இப்போது ஆட்சிக்கு எதிராகவும், மு.க. ஸ்டாலினுக்கு எதிராகப் பேசினால் வழக்குப் போடுகிறார்கள். அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி தான் தமிழ்நாட்டில் தற்போது உள்ளது. இங்குத் தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை, சபரீசன் தான் ஆட்சி செய்கிறார். கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அரசாக இந்த திமுக அரசு உள்ளது.

எல்லாம் திமுக திட்டங்கள்
திமுக ஆட்சியில் புதிய திட்டம் ஒன்றுமே அறிவிக்கப்படவில்லை. கட்டிய கட்டிடங்கள், பாலங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான். பொட்டாஷ் உரம், கட்டுமான பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், காய்கறி, மளிகை பொருட்கள் விலை ஏற்கனவே உயர்ந்து விட்டது. ஆளுநர் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டுச் செயல்படுகிறார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்கும் குரல் கொடுப்பதில்லை.

நகர்ப்புற தேர்தலில் மாபெரும் வெற்றி
தமிழக மக்களின் அதிருப்தியைப் பெற்ற ஒரு கட்சியாக ஏற்கனவே திமுக மாறிவிட்டது. அடுத்து நடக்கும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும்" எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த முடிந்த நிலையில், அடுத்து விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications