ஒற்றைத் தலைமை தொண்டர்கள் விருப்பம்..தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது என்கிறார் ஜெயக்குமார்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம் என்பதற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சான்று என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் பரபரப்பாக நடந்தது. மழை விட்டும் தூவானம் விடாத கதையாக அதிமுகவில் சர்ச்சைகள் ஓயவில்லை.
சென்னையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஓபிஎஸ் செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள் மத்தியில் ஆதங்கம் நிலவி வருகிறது என்றார்.

ஒற்றை தலைமை அவசியம்
தூங்குபவரை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது. அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை. அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம் என்பதற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சான்று என்று கூறினார். ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை செயல்வடிவம் பெறும்.

அதிமுகவின் சட்ட விதிகள்
அதிமுகவின் சட்ட விதிகள் குறித்து வைத்திலிங்கம் தெளிவு பெறுவது நல்லது. 1,000 ஆண்டுகள் ஆனாலும் கட்சி நிலைத்து நிற்கும் வகையில் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோர் சட்ட விதிகளை வகுத்துள்ளனர் என்று ஜெயக்குமார் கூறினார்.

தொண்டர்களுக்கு மன உளைச்சல்
அனைவரும் ஒற்றை தலைமையை விரும்பும் நிலையில் அதற்கு ஆதரவு தராமல் நீதிமன்றத்திற்கு செல்வதால் தொண்டர்களுக்கு தான் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களுக்குத் தான் மனஉளைச்சலே தவிர கட்சியின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்பவர்களுக்கு அல்ல.
Recommended Video

தொண்டர்கள் அதிருப்தி
ஒற்றை தலைமைக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications