எல்லா ஏரியாவுலேயும் குட்டு.. பேசாம ஓபிஎஸ் இனி சினிமாவில் நடிக்க போகலாம்.. ஐடியா கொடுத்த ஜெயக்குமார்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் இனிமேல் சினிமாவுக்கு நடிக்க போகலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகப் பேசியுள்ளார். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், ஓபிஎஸ் தரப்பு தொடர் பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில் எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஓபிஎஸ் கோஷ்டியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல உண்மை, தர்மம், நியாயம் வென்றுள்ளது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் கொண்டாடும் மகிழ்ச்சியான தீர்ப்பு இது. தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்றங்களால் ஓபிஎஸ் தரப்பினர் குட்டு வாங்கியுள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே ஓபிஎஸ் கோஷ்டி மானம் உள்ளவர்களாக இருந்தால் அதிமுக கரை வேட்டி கட்டக்கூடாது. கொடியை பயன்படுத்தக் கூடாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் வைத்த பேனர்களை பயன்படுத்தக்கூடாது. எனவே ஓபிஎஸ் இனிமேல் சினிமாவுக்கு நடிக்க போகலாம்.

மேலும் இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவின் வண்ணங்களை பயன்படுத்துவது சட்டத்தை மீறும் செயல். இது மானம் இல்லாதவர்கள் தான் செய்வார்கள். உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை உறுதிப்படுத்தி உள்ள நிலையில், மேல்முறையீடுக்கு அவர்கள் எங்கு சென்றாலும் நியாயம் தர்மம் நீதி நிலைநாட்டப்படும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications