ஜெயலலிதாவால் ஆதாயம் அடைந்த சசிகலா? கொட்டி தீர்த்த செம்மலை?: ‘ஜா’ அணி டூ ‘ஜெ’ அணி மாறியது ஏன்?
சென்னை: ஜெயலலிதா எந்தளவுக்கு சிறந்த நிர்வாகியாக இருந்தார் என்பது பற்றியும் தனக்கு எதிராக சிலர் புகார் கொடுத்த போது அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றியும் முன்னாள் அமைச்சர் செம்மலை மனம் திறந்து பேசியுள்ளார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக 'ஜா' அணி என்றும் 'ஜெ' அணி என்று செங்குத்தாகப் பிளந்தது. அப்போது யார் பக்கம் போவது என்பது தெரியாமல் தொண்டர்கள் திண்டாடினர். திருநாவுக்கரசு, செங்கோட்டையன் போன்றோர் ஜெயலலிதா பக்கம் போனார்கள். அந்தக் காலகட்டத்தில் செம்மலை ஜானகி அணி பக்கம் போனார். அதன்பின்னர் அதிமுக முழுமையாக ஜெயலலிதா கைக்கு வந்ததும், அவர் மீண்டும் ஜெ பக்கம் திரும்பினார். அமைச்சர் பதவி பெறும் அளவுக்கு கட்சியில் உயர் மட்டம் நோக்கி முன்னேறினார்.

2001க்குப் பிறகு அதிமுகவில் அசைக்க முடியாத இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கியமானவராக இருந்தவர். அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு சசிகலா எடப்பாடி, ஜானகி ஜெயலலிதா ஆகிய சர்ச்சைகள் பற்றி எல்லாம் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். அந்தப் பேட்டியில் செம்மலை பேசுகையில், "எம்.ஜி.ஆரின் விசுவாசியான நாங்கள் அவரது மறைவுக்குப் பிறகு என்ன செய்வது என்பது தெரியாமல் குழம்பினோம். எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக அவரது மனைவியை முன்னிறுத்தினார்கள். அதை எப்படி எங்களால் எதிர்க்க முடியும்? ஆகவே அவர் பக்கம் போனோம்.
ஆனால், தேர்தலில் ஜெயலலிதா அணியை மக்கள் ஆதரித்தனர். அதை ஜானகி புரிந்து கொண்டு கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்துங்கள் என்று ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டு நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டார். அதைத்தான் எடப்பாடி பழனிசாமி இப்போது சசிகலா விவகாரத்தில் தெரிவித்திருந்தார். சசிகலாவின் குடும்பத்தை மக்கள் ஏற்கவில்லை. எம்.ஜி,ஆர் மறைந்த பிறகு ஜெயலலிதாவை அரசியலில் நிலைத்தன்மை பெற வைக்க சசிகலா குடும்பம்தான் பின்புலமாக இருந்தது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஜெயலலிதாவே தனது திறமையால் கட்சிக்கு தலைமை ஏற்றார். அதன்பின்னர் ஜெயலலிதாவை வைத்து சசிகலா குடும்பம் ஆதாயம் பெற்றது என்பதே உண்மை. சசிகலா குடும்பத்தினரால் ஜெயலலிதாவுக்கு எந்த ஆதாயமும் கிடையாது" என்றவர் ஜெயலலிதா உடன் பழகி அனுபவம் பற்றிப் பேசி இருக்கிறார்.
ஜானகி அணியை விட்டு ஜெ அணிக்கு வந்த செம்மலைக்கு 1990களில் சீட்டு வழங்கப்படவில்லை. அதன் பின்னர் 2001இல் தான் இவருக்கு ஜெயலலிதா சீட்டு கொடுத்தார். அது பற்றி பேசிய செம்மலை, "என் சொந்த தொகுதி தாரமங்கலம். அதை 2001இல் பாமகவுக்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. ஆகவே ஓமலூர் தொகுதியில் என்னை நிறுத்தி வெற்றி பெறவைத்தார். எனக்கு 1990களில் சீட்டு கிடைக்காததற்கு காரணம், எனக்கு ஜெயலலிதாவுடன் அப்போது நேரடி தொடர்போ பழக்கமோ இல்லை. நான் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தேன். 2001இல் தான் எனக்கு ஜெயலலிதாவுடன் நல்ல தொடர்பு உருவானது. அவரேதான் சீட்டு கொடுத்தார். அமைச்சராகவும் ஆக்கினார்.
அன்று ஜெயலலிதா எனக்கு வழங்கிய அமைச்சரவை பொறுப்பை இன்றைக்கு 6 அமைச்சர்கள் கவனிக்கிறார்கள். அந்தளவுக்குப் பலதுறைகளை எனது பொறுப்பில் விட்டார். எனது துறை சார்ந்த கோப்புகள் போனால் உடனடியாக கையெழுத்துப் போட்டுவிடுவார். ஒருமுறை ஜெயலலிதா 1:30 வரை கோப்புகளைப் பார்த்தார். மீதி இருப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் எனப் பேனாவை மூடிவைத்து விட்டார்.
அப்போது அவரது பிஏ பிச்சாண்டி, 'செம்மலையின் துறையின் பைல் மட்டுமே உள்ளது' எனச் சொல்லி இருக்கிறார். அதைக்கேட்டவர், 'அவர் கோப்புகள் என்றால் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போடலாம். கொடுங்கள்' என்று கேட்டு கையெழுத்திட்டுள்ளார். இதைப் பல முறை பிச்சாண்டியே சொல்லி இருக்கிறார்.
அப்படித்தான் ஒருமுறை எனது ஊர்க்காரர்கள் என் மீது புகார் சொல்லி ஜெயலலிதாவுக்குக் கடிதம் போட்டுவிட்டார்கள். அதை விசாரிக்க அழைத்தார். விசாரணைக்குப் போகும்போது என்னை டம்மி ஆக்கப் போகிறார்கள் என பலரும் எதிர்பார்த்தார்கள். அடுத்த நாள் காலை கட்சி பத்திரிகையில் எனக்கு புதியதாகக் கட்சியின் அமைப்புச் செயலாளர் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
என்னை அதிகம் நம்பினார். எனக்குப் பாதுகாப்பாக இருந்தார். கூட்டணி பேச்சுவார்த்தை என்றால், என்னைக் கட்டாயம் குழுவில் போடுவார். அதை நான் கெட்டிக்காரத்தனமாக முடித்துத் தந்துள்ளேன். ஒரு முறை கம்யூனிஸ்ட் கட்சியைக் கூட்டணிக்குள் கொண்டுவரப் பல தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி முடியவில்லை. இறுதியில் நான் பேசி அவர்களை வழிக்குக் கொண்டு வந்தேன். அதை மரியாதை குறையாமல் செய்து முடித்தேன். அதற்கு ஜெயலலிதா என்னைப் பாராட்டினார்.
ஒருமுறை தாயின் பெயரை இனிஷியலாக போட்டுக் கொள்ளலாம் என்று ஜெயலலிதாதான் அரசாணை வெளியிட்டார். அதை திமுக சொந்தம் கொண்டாடியது. உடனே என்னை அழைத்து அந்த ஜிஓவை எடுத்து வரச்சொன்னார். தலைமைச்செயலகத்தில் அதைத் தேடி எடுக்க நேரமானது. உடனே காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் அதன் நகல் உள்ளதாக அறிந்து அரை மணிநேரத்தில் அதை ஃபேக்ஸ் மூலம் தேடிப் பெற்றுப் போய் கொடுத்தேன். அவரும் அதைக் கொண்டு, 'நான் பெற்ற பிள்ளைக்கு நீங்கள் பெயர் வைக்கக் கூடாது' என திமுகவுக்குப் பதிலடி கொடுத்தார். கேட்ட நேரத்திற்குள் தேடிக் கொடுத்ததால் என் மீது மதிப்பு அவருக்கு மேலும் கூடியது" என்கிறார்.












Click it and Unblock the Notifications