ஜெயலலிதா மரணம்.. ஆறுமுகசாமி ஆணையத்தின் 5 ஆண்டு கால விசாரணை.. 600 பக்க அறிக்கையால் மர்மம் விலகுமா?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பலர் தங்கள் கருத்துகளை கூறியிருந்தனர். இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஐந்து ஆண்டு காலம் விசாரணை நடத்தி 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 75 நாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா நலமோடு இருப்பதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5, 2016ஆம் நாள் ஜெயலலிதா மரணமடைந்தார்.
இந்த சம்பவத்தால் அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. மருத்துவமனையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.
ஜெயலலிதா மரணம்: தமிழக அரசிடம் ஆறுமுகசாமி ஆணையம் இன்று இறுதி அறிக்கை தாக்கல்.. எகிறும் எதிர்பார்ப்பு
ஆறுமுகசாமி ஆணையம்
கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகம்சாமி ஆணையம் தனது விசாரணையை கடந்த 2017ஆம் முதல் தொடங்கியது. போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறினர்.
சசிகலா பிராமணப்பத்திரம்
சசிகலா சிறையில் இருந்ததால் அவரது தரப்பில் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாத்ரூமில் தவறிவிழுந்த ஜெயலலிதா தம்மிடம் உதவி கேட்டதாக தெரிவித்துள்ள சசிகலா, ஜெயலலிதாவை கைத்தாங்கலாக படுக்கைக்கு கொண்டுவர தான் உதவியதாகவும், படுக்கையில் ஜெயலலிதா மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதா வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் சுயநினைவுக்கு திரும்பியதாக பிரமாணப்பத்திரத்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
தடை கோரிய அப்பல்லோ
இதனிடையே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவ நிபுணர்கள் இன்றி இயங்குவதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழுவில் இருந்தால்தான், விசாரணை முறையாக இருக்கும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
உச்சநீதிமன்றம் தடை
இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசிடம் விளக்கம் கேட்டும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது. அப்பல்லோ தரப்பில், ஆறுமுகசாமி ஆணையம் எங்களைத் தேவையில்லாமல் இழுத்தடிக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் ஆதாரங்கள், ஆவணங்களை சேகரிக்கும் குழுவே தவிர நிபுணர் குழு அல்ல. அந்த ஆணையத்தில் ஒரு வல்லுநர்கள், நிபுணர்கள் கூட இடம்பெறவில்லை. ஒரு மருத்துவர் இல்லாத இடத்தில் எங்கள் தரப்பு மருத்துவர் என்ன தகவல்களைச் சொல்ல முடியும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
உச்சநீதிமன்றம் கேள்வி
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் என்ன மாதிரியான விசாரணை முறைகளை கடைப்பிடிக்கிறது எனக் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், பெரும்பாலான ஆணையங்களின் விசாரணை முடிவுகள் எதுவுமே தெரியாமல்தான் இருந்துள்ளது. முடிவுகள் தெரியாத நிலையில் எதற்கு இத்தனை ஆணையங்களை அமைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியது.
எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அமைப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டது.
அப்பல்லோ மருத்துவர்கள்
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்காலம் மீண்டும் நீடிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் மார்ச் 7ஆம் தேதி முதல் ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை மிண்டும் தொடங்கியது. அப்போலோ மருத்துவர்கள் 11 பேர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்சனை இருந்தது என அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இளவரசி வாக்குமூலம்
இளவரசியின் மகன் விவேக் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் வீட்டில் அவருடன் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி மார்ச் 21ஆம் தேதி ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஓரிருமுறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாக கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 21ஆம் தேதி ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அவர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது என்று கூறினார். பத்து மணி நேர விசாரணைக்குப் பிறகு தனது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று கூறி பல்டி அடித்தார். ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை, பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்று சசிகலாவின் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கேட்ட கேள்விக்கு பதில் கூறினார்.
புகழேந்தி மனு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு அளித்திருந்தார். கடந்த 19 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி ஆஜராகியிருந்தார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அவரிடம் கூறப்பட்டிருந்த நிலையில், அவர் மீண்டும் ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி ஆஜரானார். அவரிடம் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை
அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்தில் கடந்த வாரம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் 22 செப்டம்பர் 2016 இரவு 10 மணிக்கு அவரது உடல்நிலை மோசமானது. அவர் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மூச்சுத்திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் மருந்துகள் செலுத்தப்பட்டது. மேலும் இதய துடிப்பை கட்டுப்படுத்த பேஸ்மேக்கரும் பொருத்தப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 28ஆம் தேதி அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சீரானது. டிசம்பர் 4ஆம் தேதியன்று அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அன்றைய நாளிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சி.பி.அர் சிகிச்சையை தொடர்ந்து 24 மணி நேரம் எக்மோ சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு, மூளை மற்றும் இதயம் செயலிழந்து அவர் உயிரிழந்தார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
5 ஆண்டு கால விசாரணை
கடந்த ஐந்து ஆண்டு காலம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இதுவரை 4 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்துள்ளார் நீதியரசர் ஆறுமுகசாமி. ஆணையம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளில் 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 158 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ், திரில்லர் போல தொடங்கிய ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா? என்பதை அறிந்து கொள்ள அதிமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.