"அவங்கள" மட்டும் நம்பாதீங்க.. கமலாலயம் பறந்த பூங்குன்றன் அட்வைஸ்.. திமுகவுக்கு இடி.. அதிமுகவுக்கு அடி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பூங்குன்றன் அட்வைஸ் தந்துள்ளார்
சென்னை: அண்ணாமலை அவர்கள் தன்னுடன் நெருக்கமாக வைத்துக் கொள்பவர்களை கூட பலமுறை யோசித்து விட்டே வைத்துக் கொள்ள வேண்டும் என்று, அதிமுகவின் பூங்குன்றன் அட்வைஸ் தந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.
எனினும், அவ்வப்போது அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் பூங்குன்றனின் பதிவுகள் என்றாலே, மிகுந்த எதிர்பார்ப்பையும் சில சமயம் ஏற்படுத்திவிடும்.
சீமைச்சாமி அண்ணனை மறக்க முடியுமா? ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி மறைவு பற்றி பூங்குன்றன் உருக்கம்!
கிளியர் டவுட்
இதில், கடந்த சில மாதங்களாகவே, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பூங்குன்றன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, "அண்ணாமலை, அண்ணாந்து பார்க்கின்ற மலை, அதைப் போலவே இன்று இந்த அண்ணாமலையும் உயர்ந்து நிற்கிறார். தமிழகத்தில் எதிர்க்கட்சி யார்? என்று தெரியாத அளவிற்கு தனது தைரியமான பேச்சால் வளர்ந்தும், தான் சார்ந்த கட்சியை வளர்த்தும் வருகிறார். அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடம் புதிய எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
திணறல்
தமிழகத்தில் அரசியலுக்கு வரும் புதியவர்களை பிரதமரின் ஆளுமையும், அண்ணாமலையின் தன்னம்பிக்கையும் ஈர்க்கும் என்பதே சத்தியம். தமிழகத்தில் அண்ணா மலை வளர்கிறது என்றால் யாரோ தேய்ந்து கொண்டிருக்கிறார்கள்" என்று தன்னுடைய ஆதங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தார் பூங்குன்றன்.. இப்போது மீண்டும் அண்ணாமலை குறித்து பதிவிட்டுள்ளதுடன், சில அட்வைஸ்களையும் பூங்குன்றன் அதில் தெரிவித்துள்ளார். அந்த பதிவு இதுதான்:
வீழும் எதிரிகள்
"அண்ணாமலை அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்பது, அவரை பலரும் சேர்ந்து வீழ்த்த நினைப்பதில் இருந்தே வெளிப்படையாகத் தெரிகிறது. எதிர்க்கட்சியினரை திணறடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு உட்கட்சியிலேயே பிரச்சனை வருகிறது. அதுவாக வருகிறதா இல்லை எதிரிகளால் புகுத்தப்படுகிறதா? புரியவில்லை. நாம் வளர்கிறோம் என்றால் நமக்கு எதிரிகளும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? ஒரு கட்சியில் ஏற்கனவே பயணித்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் புதிதாக ஒருவர் தலைவராகும் போது எதிர்ப்புக்கள் எழத்தான் செய்யும்.
மூளை வித்தியாசம்
அதிலும் இவர் இளைஞராக வேறு இருக்கிறார். சொந்தக் கட்சியில் சிலர் எதிர்க்கத்தானே செய்வார்கள். ஒரு தலைவர் புதிதாக வளர்கிறார் என்பதை சொந்தக் கட்சியிலும், எதிர்க்கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தடை போட முயற்சிக்கிறார்கள். திட்டம் போட்டு போராடுகிறார்கள். இன்றைக்கு திமுகவிற்கு எதிரி அதிமுக என்ற நிலையை மாற்றிக் கொண்டு இருக்கிறாரே..! அண்ணாமலை என்று மக்களே வியந்து பேசுகிறார்கள். சிலர் பாஜக தான் தமிழகத்தில் எதிர்கட்சியாக செயல்படுகிறது என்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள். அண்ணாமலை அவர்கள் பேசினால் காரியம் நடக்கிறது என்று பலரும் நம்புகிறார்கள்.
சகஜமப்பா
அப்படி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்களை எதிரிகளும், நண்பர்களும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா..! "அரசியல்வாதியின் மூளை வித்தியாசமாக வேலை செய்யும்" அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால் அண்ணாமலை அவர்கள் காவல்துறை அதிகாரி என்பதை மறந்துவிட்டு முழு அரசியல்வாதியாக மாறி இந்தப் பிரச்சனைகளை கையாண்டால் அதற்கு எளிதாக தீர்வு கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. இனி அண்ணாமலை அவர்கள் தன்னுடன் நெருக்கமாக வைத்துக் கொள்பவர்களை கூட பலமுறை யோசித்து விட்டே வைத்துக் கொள்ள வேண்டும். "அரசியலில் இனி யாரையும் நம்புவதற்கு இல்லை' என்பதே பல தலைவர்கள் கற்றுக்கொண்ட பாடம்.
மம்மி வளர்கிறேனே
வளர்ந்து கொண்டிருப்பவரை எல்லோரும் சேர்ந்து வீழ்த்த நினைக்கிறார்கள் என்றால் நாம் அடுத்த அடியைப் பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும். ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அண்ணாமலை அவர்கள் இனி அடுத்த அடிகளை எடுத்து வைக்க வேண்டும் என்பதை காலம் அவருக்கு போதிக்கிறது. அடுத்த அடி எது என்பது தன்னை தவிர யாருக்கும் புரியக்கூடாது என்பதே இன்றைய தேவை. பேச்சைக் குறைத்து செயலில் வேகத்தை கூட்ட வேண்டும் என்பது அண்ணாமலை அவர்களுக்கு நான் தரும் ஆலோசனை..! எது எப்படியோ..! "நான் வளர்கிறேனே மம்மி" என்று அண்ணாமலை சொல்வது காதில் விழாமலில்லை..!" என்று பூங்குன்றன் அதில் பதிவிட்டுள்ளார்.