எப்படித் தான் இப்படி யோசிக்கிறாங்களோ! சென்னை டூ காஞ்சிபுரம் வரை கவனம் ஈர்த்த வள்ளல் போஸ்டர்!
சென்னை: இந்தியாவின் வள்ளல் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் இன்று தமிழக மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது போல் நாளை இந்தியா முழுவதும் மகளிருக்கு உரிமைத் தொகை தரப்போகும் புதிய தலைமையே எனவும் கூறி திமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகி ஜெ.எம்.பஷிர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனம் ஈர்த்துள்ளன.
அதிமுக சிறுபான்மையினர் அணியில் மாநில இணை செயலாளராக இருந்த ஜெ.எம்.பஷிர், எடப்பாடி பழனிசாமி மீதான தனது அதிருப்தி காரணமாக அவருக்கு எதிராக பகிரங்க பேட்டியளித்துவிட்டு அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இப்போது தேசியத் தலைவர் என்ற பெயரில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றுப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து நேற்றைய தினம் காஞ்சிபுரம் சென்ற நிலையில், அவர் பயணிக்கும் வழியெங்கும் ''இந்தியாவின் வள்ளல் ஸ்டாலின்'' என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பளிச்சிட்டன.
ஸ்டாலின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்து வரும் நிலையில், அவரை பிரதமர் வேட்பாளராகவே முன்னிறுத்தி இந்தியாவின் புதிய தலைமையே என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. பொதுவாக இது போன்ற வித்தியாசமான போஸ்டர்கள் மதுரை பக்கம் தான் ஒட்டப்படும்.
இந்நிலையில் சென்னையிலும் இப்போது இது போன்ற போஸ்டர் கலாச்சாரம் வந்துவிட்டது. திமுக சிறுபான்மைப் பிரிவு என்ற பெயரில் இதுவரை போஸ்டர் அடித்து வந்த பஷிர், இப்போது நடிகர் என்பதுடன் தன்னை சுருக்கிக் கொண்டதன் பின்னணியில் உட்கட்சி பாலிடிக்ஸ் இருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications