கலையும் கனவு? வெறும் 15 நிமிடம்தான் "கேப்".. எடப்பாடிக்கு பெரிய சோதனை! "இந்த" 4ல் ஒன்றுதான் நடக்கும்
சென்னை: அதிமுக பொதுக்குழு நாளை நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து இருக்கிறார். மொத்தம் 16 தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட உள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்குவது தொடர்பான தீர்மானமும் இதில் நிறைவேற்றப்பட உள்ளன. ஆனால் இந்த பொதுக்குழுவிற்கு சட்ட ரீதியாகவும் சிக்கல் உள்ளது.

15 நிமிட கேப்
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரிய ஓ பன்னீர்செல்வம் மனு மீதான உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரணை நடந்து முடிந்துள்ளது.ஓ பன்னீர்செல்வம் தொடுத்த இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை தீர்ப்பளிக்க உள்ளார். இவர் காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளார். 9.15 மணிக்கு பொதுக்குழு நடக்க உள்ளது. வெறும் 15 நிமிட இடைவெளியில் பொதுக்குழு நடக்க உள்ளது. இதனால் நாளை காலை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொதுக்குழு நடத்தலாம்
மொத்தம் 4 விதமான தீர்ப்புகள் இதில் வழங்கப்படலாம். முதல் விஷயம்.. அதிமுக பொதுக்குழு நடக்கலாம். உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதால் அதை தடை செய்ய முடியாது. பொதுக்குழு நடக்கட்டும். உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம். இது எடப்பாடிக்கு ஆதரவான தீர்ப்பாக அமையும். பெரும்பாலும் இந்த தீர்ப்புதான் வழங்கப்படும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இது போக மற்ற 3 தீர்ப்புகள் வந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

தடை
அதன்படி பொதுக்குழுவிற்கு தடை விதிக்கப்பட்டால் அது சிக்கலாகும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பும் இதை ஒப்புக்கொண்டுள்ளது. அப்படி இருக்கும் போது பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட வேண்டும். எனவே இந்த பொதுக்குழு சட்டப்படி நடக்கவில்லை என்று கூறி, பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த தீர்ப்பு வந்தால் எடப்பாடி கனவு மீண்டும் கலையும்.

தீர்மானம்
அது இல்லாமல்.. பொதுக்குழு நடத்தலாம். ஆனால் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முன் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அல்லது கட்சியில் பதவிகளை நீக்கவோ, சேர்க்கவோ கூடாது என்று தீர்ப்பு வரலாம். ஆனால் இதற்கு வாய்ப்பு குறைவு. ஏற்கனவே பொதுக்குழுவில் 23 தீர்மானம் மட்டுமே நிறைவேற்றலாம் என்று இரட்டை நீதிபதி அமர்வு விதித்த தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால், தனி நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பை வழங்க வாய்ப்பு குறைவு.

கோர்ட் விதிகளுக்கு கட்டுப்பட்டு
இன்னொரு முக்கியமான தீர்ப்பிற்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி.. பொதுக்குழுவை நடத்தலாம். ஆனால் அதில் எடுக்கப்படும் முடிவு நீதிமன்ற விதிகளுக்கு கட்டுப்பட்டது. நீங்கள் எடுக்கும் முடிவை நீதிமன்றம் மாற்ற முடியும். அந்த கட்டுப்பாட்டோடு பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கிறோம் என்று தீர்ப்பு வழங்கலாம். இந்த தீர்ப்பிற்கும் அதிக வாய்ப்பு உள்ளது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications