வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து.. விஜிலன்ஸிடம் சிக்கிய மாஜி கே.சி.வீரமணி.. எப்ஐஆர் சொல்வது என்ன?
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்களை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சேர்த்து உள்ளதாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக ரெய்டு நடத்தி வந்த நிலையில் சில நாட்கள் பிரேக்கிற்கு பின்பு மீண்டும் ரெய்டு நடக்க தொடங்கி உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்பி வேலுமணி போன்றவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த மாதங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டது.
இந்த ரெய்டுகளுக்கு பின் வழக்கு பதியப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணிக்கு எதிராக ஏற்கனவே மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இன்னொரு அமைச்சர் கேசி வீரமணி லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார்.

கே.சி.வீரமணி லஞ்ச ஒழிப்புத்துறை
அதன்படி சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்பட 20க்கும் மேற்பட்ட ரெய்டு தற்போது நடந்து வருகிறது. கே. சி வீரமணிக்கு சொந்தமான முக்கியமான இடங்களில் எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் உள்ளது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.

வழக்கு
இன்று காலை ரெய்டு ஒரே நேரத்தில் பல இடங்களில் தொடங்கியது. முதலில் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும், திருவண்ணாமலையின் குருவிமலை கிராமத்தில் உள்ள வீரமணியின் உறவினர் வீடுகளிலும், பெங்களூரில் இருக்கும் அவருக்கு சொந்தமான பங்களா மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் தொடங்கியது. நேரத்தில் 300க்கும் அதிகமான அதிகாரிகள் களமிறங்கி தீவிரமாக ரெய்டு நடத்தி வருகிறார்கள். இந்த ரெய்டை தொடர்ந்து இவர் மீது எப்ஐஆர் பதியப்பட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.

என்ன பிரிவுகள்
இவருக்கு எதிராக 3 சட்டங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
சட்டம் 1. லஞ்ச தடுப்பு சட்டம் 1998ன் கீழ் 13 (2) மற்றும் 13(1) (இ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
சட்டம் 2. லஞ்ச தடுப்பு சட்டம் 1998ன் கீழ் 13 (2) மற்றும் 13(1) (பி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
சட்டம் 3 திருத்தப்பட்ட லஞ்ச தடுப்பு சட்டம் 2018ல் 07 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.

யார் புகார்?
அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் முதல் தகவல் அறிக்கையில் எஸ். விஜய் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. நம்ப தகுந்த உண்மையான ஆவணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் சொத்துக்கள் சேர்த்ததாக வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

என்ன புகார்?
அமைச்சராக இருந்த கடந்த 10 ஆண்டுகளில் இவரின் சொத்து மதிப்பு 7 கோடி ரூபாயில் இருந்து 76.65 கோடி ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது. 2011 முதல் 2021ம் ஆண்டுக்கு இடைப்பட்ட அதாவது 10 வருடங்களில், வீரமணிக்கு, பல இடங்களில் இருந்து சொத்து சேர்ந்து உள்ளது. 43,06,27,147 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை வாங்கி இருக்கிறார். ரூ.15,74,35,980 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை வாங்கி இருக்கிறார் என்று அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில் உள்ளது. இதற்கான வருமான கணக்கு காட்டப்படவில்லை.

கணக்கு
கே.சி.வீரமணியின் உறவினர்கள் பெயரிலும் வருமானத்தில் அடங்காத பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. இவருக்கு நெருக்கமான அல்லது சொந்தமான கே.ஏ.பழனி மற்றும் ஆர்.எஸ். கல்வி மற்றும் அறக்கட்டளை, ஹோம் டிசைனர்ஸ் மற்றும் பேப்ரிகேட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டட் (ஹோட்டல் ஹில்ஸ்-ஒசூர்) விபிஆர் ஹில் பிராப்பர்டிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே கே.சி.வீரமணி மீது வழக்கு பதிய வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளது.

முகாந்திரம்
அமைச்சராக இருந்த கடந்த 10 ஆண்டுகளில் கே.சி.வீரமணி தனது நிலங்களின் மதிப்பை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்ததை பயன்படுத்தி சொத்துக்களின் மதிப்பை குறைத்து காட்டி பத்திர பதிவு செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. எஸ்பி வேலுமணிக்கு எதிரான ரெய்டில் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் முக்கியத்துவம் பெற்ற நிலையில் கேசி வீரமணி ரெய்டில் அறப்போர் இயக்கம் கொடுக்க புகாரின் அடிப்படையிலேயே ரெய்டு நடக்கிறது.












Click it and Unblock the Notifications