Exclusive: குஷ்பு அழையா விருந்தாளியாக பாஜக கதவை தட்டுகிறார்... ஏன் போகிறார் தெரியுமா..? -K.s.அழகிரி
சென்னை: குஷ்பு அழையா விருந்தாளியாக சென்று பாஜகவின் கதவை தட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.
அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது;

பெரிய பொறுப்பு
''குஷ்பு எடுத்துள்ள முடிவு தவறானது. காங்கிரஸ் பேரியக்கம் குஷ்புவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்திருந்தது. திமுகவில் இருந்து கட்சி மாறி அவர் காங்கிரசுக்கு வந்த போது அகில இந்திய செய்தித் தொடர்பாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது. வேறு எந்த அரசியல் கட்சியிலும் குஷ்பு இதனை எதிர்பார்க்கவே முடியாது, அது கிடைக்கவும் கிடைக்காது.''

கவுரவம் கிடைக்காது
''குஷ்புவுக்கும் அவரது கணவர் சுந்தர்.சி-க்கும் சில பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதால் அதனை சரி செய்துகொள்வதற்காக பாஜகவை நோக்கி குஷ்பு செல்கிறார். நான் அறிந்தவரை டெல்லியில் விசாரித்தவரை குஷ்புவின் வருகையை பாஜக விரும்பவில்லை என்று எனக்கு தகவல் கிடைத்தது. குஷ்புவுக்கு காங்கிரஸில் கிடைத்த கவுரவம் பாஜகவில் கிடைக்காது. ''

விரைவில் புரிவார்
''குஷ்பு பாஜகவில் இணைய வேண்டும் என அக்கட்சியின் தேசியத் தலைமை பெரியளவில் விரும்பவில்லை என்பதே உண்மை. குஷ்பு அழையா விருந்தாளியாக சென்று பாஜகவின் கதவை தட்டுகிறார். உங்களுக்கு தெரியும் வீட்டிற்கு வேண்டாத விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கும் என்று, அப்படித்தான் குஷ்புவும் வேண்டாத விருந்தாளியாக இப்போது பாஜகவை நோக்கி போகிறார். அங்கு அவருக்கு என்ன மரியாதை கிடைக்கப்போகிறது என்பது அவருக்கு விரைவில் புரியவரும்.''

மரியாதை தந்தோம்
''குஷ்புவுக்கு தமிழகத்திலும் சரி டெல்லியிலும் சரி காங்கிரஸ் நிர்வாகிகள் உரிய மரியாதை அளித்து வந்தனர். குஷ்பு தனது விலகல் கடிதத்தில் சொல்லியிருப்பது போல் எல்லாம் இல்லை. அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டு அதற்கு ஆயிரம் காரணங்களை கூறி வருகிறார்'' என்று அலட்டிக்கொள்ளாமல் பேசி முடித்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.












Click it and Unblock the Notifications