"தேவதைகளுடன் பிறந்தநாள் கொண்டாடுகிறாயா நந்தனா" துபாயில் இறந்த மகளை நினைத்து பாடகி சித்ரா உருக்கம்
சென்னை: பிரபல பின்னணி பாடகி சித்ரா மறைந்த தன்னுடைய மகளின் பிறந்நாளான இன்று உருக்கமான ஒரு பதிவை போட்டுள்ளார். இது பார்ப்போர் நெஞ்சை சோகமடையச் செய்கிறது.
கோடி கோடியாக சொத்துகளும் வீடு வாசல் பங்களாக்களும் தினந்தோறும் கோடிகளில் புரண்டாலும் விலை மதிப்பில்லாத சொத்து குழந்தை செல்வம்தான். இதற்கு ஈடு இணையேதும் இல்லை.
தாய்க்கும் தாய் பாசத்திற்கும், தாய் பாலுக்கும் ஈடு இணை இல்லாததை போல் குழந்தை செல்வதற்கு ஈடு இணை இந்த உலகில் இல்லவே இல்லை. அந்த வகையில்தான் திருமணமாகி தன்னை அம்மா என அழைக்க ஒரு குழந்தை பிறக்காதா? என தவம் இருந்து குழந்தை பெற்ற காலம் எல்லாம் உண்டு.

குழந்தை செல்வம்
சிலருக்கு இந்த செல்வம் உடனே கிடைத்துவிடும். சிலருக்கு உருகி உருகி கிடைக்கும். இன்னும் சிலருக்கு இந்த செல்வம் கிடைக்காமல் வாழ்க்கையே வெறுமையாக போய்விடும். மற்றும் சிலருக்கும் குழந்தை செல்வம் இருந்தும் பாதியில் இல்லாமல் போய்விடும். இது நரகத்திலும் நரகம். தாயிடம் குழந்தையை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு திடீரென கடவுள் பறித்து கொள்ளும் நிலை யாருக்கும் வரவே கூடாது.

வலிகளை அனுபவித்தவர்
இந்த வலிகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது. அத்தகைய வலிகளை அனுபவித்தவர் பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா. இவர் பிரபல தொழிலதிபர் விஜய் ஷங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 15 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதற்காக சித்ராவும் அவரது கணவரும் வேண்டாத தெய்வம். அப்படி தவம் இருந்து 15 ஆண்டுகள் கழித்து சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

நந்தனா
அந்த குழந்தைக்கு நந்தனா என பெயர் சூட்டினார். தவமாய் தவமிருந்து பெற்ற நந்தனாவை எல்லா தாய்களை போல் பாலூட்டி, சீராட்டி வளர்த்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு துபாயில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாடகி சித்ரா சென்ற போது தனது குழந்தை நந்தனாவையும் அழைத்துச் சென்றார்.

8 வயதான குழந்தை நந்தனா
8 வயது குழந்தையான நந்தனாவுடன் துபாயில் நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். அந்த ஹோட்டலில் நீச்சல் குளத்தில் எதிர்பாராதவிதமாக குழந்தை விழுந்தது. இதில் நந்தனா உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் மகளை பறிகொடுத்த சித்ரா மீண்டு வருவதற்கே நிறைய ஆண்டுகள் ஆனது. அந்த நிலையில் தனது மகளின் பிறந்தநாளான இன்று அவர் உருக்கமான ஒரு பதிவை போட்டுள்ளார்.

தேவதைகளுடன் பிறந்தநாள் கொண்டாடுவாய்
அதில் சித்ரா கூறியிருப்பதாவது: நந்தனா, நீ தேவதைகளுடன் சொர்க்கத்தில் உன் பிறந்தநாளை கொண்டாடுவாய். எத்தனை ஆண்டுகள் வந்தாலும் சென்றாலும் சரி உனக்கு ஒரு போதும் வயதாகாது. நீ என்னை விட்டு வெகு தூரத்தில் இருந்தாலும் பாதுகாப்பாக இருப்பாய் என்பதை நான் அறிவேன். உன்னை எப்போதும் நேசிக்கிறேன். இன்றைய தினம் உன்னை அதிகமாகவே மிஸ் செய்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே நந்தனா என அந்த குழந்தையின் புகைப்படத்துடன் சித்ரா பதிவை போட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் சித்ராவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அடுத்த ஜென்மத்தில் நீங்கள் நந்தனாவுக்கு மகளாக பிறக்கும் பாக்கியம் கிடைக்கும் என பலர் சித்ராவை ஆசுவாசப்படுத்தி வருகிறார்கள். எனினும் இழந்தது இழந்ததுதானே.. திரும்பி கிடைக்காதே என நினைக்கும் போது மனம் ரணமாகத்தான் செய்கிறது.












Click it and Unblock the Notifications