மகளிர் உரிமைத்தொகை.. நிராகரிக்கப்பட்ட 57 லட்சம் விண்ணப்பங்கள்.. காரணம் என்ன? வெளியான தகவல்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணங்களையும் பார்க்கலாம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் மிகவும் கவனம் பெற்ற அறிவிப்பாக இது இருந்தது. திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை விமர்சிக்க தொடங்கின.

மக்களும் இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், விடுபட்ட நபர்களுக்காக சிறப்பு முகாமும் மூன்று நாட்கள் நடைபெற்றது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்காக 1 கோடியே 83 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தப் பணிகள் நிறைவு அடைந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்தது.
கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 83 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ள நிலையில், சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 3 லட்சம் அரசு ஊழியர்கள் என்று அரசு அதிகாரிகள் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே முறையாக விதிமுறைகளை அரசு வெளியிட்டு இருந்த போதும் 3 லட்சம் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதனால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட மகளிருக்கு அரசு தரப்பில் விளக்கம் தரப்படும். அதாவது, உங்களின் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற காரணத்துடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படட்து தொடர்பாக எழுத்துப் பூர்வமாக விண்ணப்பம் செய்த மகளிருக்கு வருவாய்த்துறை தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, உண்மையான பயனாளி விடுபட்டு இருந்தால் உடனே அதற்கான ஆதாரத்துடன் மீண்டும் அதிகாரிகளை அணுகி திட்டத்தின் கீழ் பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. சொந்த கார், 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் மகளிர் அதிக அளவில் விண்ணப்பம் செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications