பேராசிரியர் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம்.. ஏப்ரல் 6 வரை கலாஷேத்ரா கல்லூரி மூடல்!
சென்னை : மாணவிகளுக்கு, கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஏப்ரல் 6 வரை கலாஷேத்ரா ருக்மினி தேவி கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மினி தேவை நுண்கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலாஷேத்ரா
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சென்னை கலாஷேத்ரா ருக்மினி நுண்கலைக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்து அந்தக் கல்லூரி மாணவிகள் இணையத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தை கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம், இது குறித்து டிஜிபி விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை அடையாரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறப்பட்டதாகவிம் அதுபோல் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

பாலியல் குற்றச்சாட்டு
மாணவி கூறியதன் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு வழங்கிய உத்தரவை வாபஸ் பெற்றது. ஆனால், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா 3 மணிநேரம் அடையாரில் உள்ள கலாஷேத்ராவில் விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் முறைப்படி விசாரிக்காமல் மாணவ மாணவிகள் அனைவரையும் ஒன்றாக வைத்து விசாரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாணவர்கள் போராட்டம்
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் மீதான பாலியல் தொல்லை புகாருக்கு கலாஷேத்ரா நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும் தேசிய மகளிர் ஆணையமும் முறையாக விசாரணை செய்யாத காரணத்தாலும் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி மூடல்
இந்நிலையில், பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி கல்லூரி ஏப்ரல் 6ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும், இந்த நாட்களில் நடைபெறவிருக்கும் தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்றும் கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இரண்டு நாட்களில் தங்கும் விடுதிகளை மாணவர்கள் அனைவரும் காலி செய்யுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications