கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் இறந்தது எப்படி? தேசிய மகளிர் ஆணையம் விசாரணை..குஷ்பு தலைமையில் குழு
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 61 பேர் பலியாகி உள்ளனர். இதில் 6 பேர் பெண்கள். இந்நிலையில் தான் பெண்களின் பலி தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்துள்ளதோடு, நடிகை குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18 ம் தேதி கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதில் அதிகளவில் மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் பலரும் அடுத்தடுத்து பலியாகினர். இன்று காலை நிலவரப்படி மொத்தம் 61 பேர் வரை பலியாகி உள்ளனர். இன்னும் 140க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரையும் காப்பாற்ற தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
இந்த கள்ளக்குறிச்சி சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கி உள்ளது. கள்ளச்சாராய பலிக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ஆளுநர் ஆர்என் ரவியிடம் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் புகாரளித்துள்ளனர். இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பலியாகி உள்ள 61 பேரில் 4 பேர் பெண்கள் ஆவார்கள். இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பான விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க தொடங்கி உள்ளது. ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆணையம் நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஊடகங்களில் வந்த தகவலின்படி தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் பலியாகி உள்ளது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இதற்காக குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications