‛தடுமாறும் தமிழக அரசின் பேரவலம் இது’.. கள்ளச்சாராய மரணத்தால் கொதித்த ஜிவி பிரகாஷ்.. கடும் அட்டாக்
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியான நிலையில் ‛‛இது தமிழக அருசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படத்த முடியாத பெருங்குற்றம்'' என இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுவது உண்டு. போலீசாரும் விசாரணை நடத்தி கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்வது உண்டு. இந்நிலையில் தான் தற்போது தமிழகத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் பூதாகரமாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது வரை 42 பேர் வரை பலியாகி உள்ளனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சியில் 42 பேர் பலியானதற்கு தமிழக அரசின் அலட்சியப்போக்கே காரணம். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியது தான் இத்தகைய உயிர் பலிகளுக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை, டிடிவி தினகரன், நடிகர் விஜய், இயக்குநர் பா ரஞ்சித் உள்பட பலர் தமிழக அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியால் தமிழக அரசை இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது. தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உறுதி செய்ய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நடிகர், நடிகைகள் பலரும் கருத்து தெரிவித்து தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, சத்யராஜ், சித்தார்த் உள்பட பல நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் கொதித்துப்போய் கருத்து தெரிவித்ததாகவும், அவர்கள் தற்போது திமுக ஆட்சியில் மவுனம் காப்பதாகவும் பலரும் வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தமிழ் திரையுலகில் நடிகர் விஜய், இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோரை தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசை நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications