கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. தவறு யார் செய்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை - அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், யார் மீது தவறு இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை : மாணவர்கள் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், யார் மீது தவறு இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார். மாணவியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று போராட்டம் வன்முறையாக வெடித்தது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அப்பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில் தற்போது வேதியியல் ஆசிரியர், கணித ஆசிரியர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். நேற்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை 390க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
இந்நிலையில், மாணவி மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'கனியாமூர் தனியார் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசு பள்ளிகளில் சேர்க்கப்படும்
தனியார் பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக, மீண்டும் அப்பள்ளி இயங்க 2 மாதங்கள் ஆகலாம். எனவே மாணவர்கள் நலன் கருதி கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களை அரசுப்பள்ளிகள் மற்றும் அருகாமையில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடும் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், யார் மீது தவறு இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. பெற்றோர் உணர்வை புரிந்து கொண்டு தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.

மாணவர்களுக்குக் கவுன்சிலிங்
தமிழகத்தில் அனுமதியில்லாமல் பள்ளிகள் தன்னிச்சையாக விடுமுறை அளிக்கக் கூடாது. மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து விட்டு இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.மாணவர்கள் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications