அண்ணாமலை திமுக இடையே ரகசிய டீலிங் என்பதுதான் எனது புகாரே..! மீண்டும் பரபரப்பை கிளப்பிய கல்யாண் ராமன்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது விமர்சனம் வைத்ததால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பி உள்ளார் கல்யாண் ராமன்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி நீடித்திருந்தால் பல இடங்களில் இரு கட்சிகளுமே வெற்றி பெற்றிருக்கும் என பாஜக நிர்வாகிகள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாஜகவின் மாநில அறிவுசார் பிரிவு பார்வையாளரான கல்யாண ராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டு வந்தார். இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில் நேற்று தமிழக பாஜக மையக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா, கல்யாண் ராமன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்புகளை அந்தந்த அணியைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.
பாஜக மாநில அலுவலக செயலாளர் சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், "சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் அவர்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும் கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார்.
இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி திரு.கல்யாணராமன் அவர்கள் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் 1 வருடத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கல்யாணராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக ஆர்.எஸ்.எஸ் என்ற தாய் அமைப்பின் அரசியல் உருவாக்கம். பாஜக என்பது வெறும் கட்சியல்ல... அது ஒரு சிந்தனையோட்டம், சித்தாந்தம், பாரத அன்னைக்கான சேவை. இன்று என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தரப்பட்டுள்ள அறிவிக்கை துரதிர்ஷ்டவசமானது.
மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுடன் ரகசிய உறவை உருவாக்கி அதிமுக - பாஜக கூட்டணியை முறித்ததாக சொல்லப்படுவதே எனது அடிப்படை குற்றச்சாட்டு. அது குறித்து அண்ணாமலையின் தலைமையின் கீழ் செயல்படும் நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது என்பது அடிப்படை நீதி. It is against the principles of natural Justice.
ஆங்கிலத்தில் "No one can be a judge in his own cause" என்று ஒரு பார்வை உண்டு. இந்த பார்வையை மீறுகிறோம் என்ற அடிப்படை விஷயம் கூட சம்பந்தப்பட்ட நபர்கள் அறியவில்லை என்பது பரிதாபம்.
இந்த அடிப்படை நீதியை மீறும் செயல் கண்டனத்திற்குரியது. இது குறித்து பாஜக மத்திய தலைமையிடம் எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். மற்றபடி சமூக - தேசிய நலனிற்காக தொடர்ந்து பணியாற்றுவதே மாகாளி - பராசக்தியின் ஆணை. அது தொடரும்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications