பாஜக கல்யாணராமன் மீது பாய்ந்தது குண்டாஸ்.. அடுத்த ஒரு வருடத்திற்கு சிறை தான்..?
சென்னை: சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமனை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கச் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பாஜக பிரமுகரான கல்யாணராமன் ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டு வருவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் இருந்தது.
இது தொடர்பாக அவர் மீது தமிழ்நாடு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையத்தில் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

சர்ச்சை கருத்து
இருப்பினும், அவர் மீது யாரும் போலீஸில் முறையாகப் புகார் அளிக்காமல் இருந்தது. இதனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து பாஜக பிரமுகரான கல்யாணராமன் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்திருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

நள்ளிரவில் கைது
இதையடுத்து கல்யாணராமனை தமிழ்நாடு போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என இணையத்தில் பலரும் பதிவிட்டிருந்தனர். இது தொடர்பாகத் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமாரின் உதவியாளர் சந்தோஷ் சென்னை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்த புகார் அளிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த அக். 16ஆம் தேதி இரவு கைது செய்தனர்.

பாய்ந்தது குண்டாஸ்
சென்னை வளசரவாக்கம் தேவிகுப்பம் அன்பு நகர் பகுதியில் உள்ள கல்யாணராமன் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு வரும் பாஜக பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஓராண்டுக்குச் சிறையிலிருந்து வெளியே வர முடியாது. ஜாமீனும் கிடைப்பதும் மிக மிகக் கடினம்.

அதிரடி நடவடிக்கை
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாகப் பேசியதானப் புகாரின் பேரில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் சர்ச்சைக்குரிய வகையிலும் மோதலை உருவாக்கும் வகையிலும் கருத்துகளைத் தெரிவித்து வந்த சாட்டை கிஷோர் கே சாமி, துரைமுருகன் உள்ளிட்ட பலர் மீது தமிழ்நாடு போலீசார் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications