பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-3 சீசனை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான பின்னர் கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பதால் காரசார அரசியல் இருக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் பணிகளை தீவிரமாக முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பிக்பாஸ் 3-வது சீசன்
இந்த நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ்-3 -வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். மேலும் தாம் கட்சித் தலைவரானதால் சினிமாவில் இருந்து ஒதுங்குவதாகவும் கமல்ஹாசன் கூறி வந்தார்.

தலைவன் இருக்கின்றான்
இதனிடையே ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். ரகுமான், கமல்ஹாசனுடன் விவாதிக்கும் ஒரு படத்தை வெளியிட்ட்டிருந்தார். பின்னர்தான் ராஜ்கமல் பிலிம்ஸின் தலைவன் இருக்கின்றான் என்கிற திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரகுமானுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார் என்கிற தகவல் வெளியானது.

மநீமவுக்கு பிரசாந்த் கிஷோர்
மநீம ஒரு பக்கம் இருக்க கமல்ஹாசன் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருப்பது கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. அதுவும் மநீமவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தர பிரசாந்த் கிஷோர் வந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார்.

காரசார அரசியல் படம்?
அதனால் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் திரைப்படம் நிச்சயம் அரசியல் படமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. தாம் மக்களிடம் சொல்ல விரும்பும் கருத்துகளை ஆணித்தரமாக அதிரவைக்கும் வகையில் இப்புதிய படத்தில் கமல்ஹாசன் வெளிப்படுத்தக் கூடும் என தெரிகிறது.
சினிமாவும் ஒரு பிரசார ஆயுதமே!












Click it and Unblock the Notifications