பிரதமர் தமிழகம் வருவதை யாரும் கேள்வி கேட்க முடியாது... கமல் ஹாசன் பொளேர்
சென்னை: பிரதமர் தமிழகம் வருவதை யாரும் கேள்வி கேட்க முடியாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பூர் வருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினரும் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், திருப்பூரில் பதற்றமான சூழலை சமாளிக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் வருகையின் போது தனது வருத்தத்தை கருப்புக்கொடி காட்டி வெளிப்படுத்துகிறார் வைகோ. பிரதமர் வருவதை யாரும் கேள்வி கேட்க முடியாது. வரவில்லை என்றால் ஏன் வரவில்லை என கேட்கலாம் என்றார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வர வேண்டும் என தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்ததற்கு பதில் அளித்த கமல்ஹாசன், கே.எஸ்.அழகிரி அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார், என் கருத்தை நான் அவரிடம் தெரிவிக்கிறேன் என்றார்.
இதற்கிடையில், திமுகவை விமர்சித்த கமலுக்கு கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்தது திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கே.எஸ். அழகிரி, கமல்ஹாசன் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதாக, கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிதான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.