அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்.. கமல்ஹாசன் ட்விட்டரில் சபதம்!
சென்னை: அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா வரும் நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளுக்கு கமலுக்கு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என வாழ்த்து தெரிவித்தனர்.
இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில் என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பிறந்த நாளை 'நற்பணி' தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள உள்ளும் புறமும் சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் என்றார்.