"வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள்.. ஏ1 ஊழல் புத்திரர்கள்.." காட்டமான கமல்ஹாசன்
சென்னை: நான் ஏ டீம், பி டீம் கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான, நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறி, அவரை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சூரப்பா பதவியில் தொடர கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலினும் கோரிக்கை விடுத்தார். இப்படி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சூரப்பா விஷயத்தில் ஒரே அணியில் நின்றன. இந்த நிலையில்தான், நேற்று முன்தினம், டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

கமல் வீடியோ
சூரப்பா, இன்னொரு நம்பி நாரயணனாக மாறிவிட கூடாது என்று வீடியோவில் பேசியிருந்தார். ஊழல் செய்யாததால் சூரப்பா வேட்டையாடப்படுவதாக கமல் குற்றம்சாட்டினார். இந்த நிலையில்தான், கமல்ஹாசன், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு இப்படி வீடியோ வெளியிட்டதாக அதிமுக மற்றும் திமுக கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். பாஜகவின் பி டீம் என்று அழைத்து வெளியான கமெண்ட்களை பார்க்க முடிந்தது.

அறத்தின் பக்கம்
இந்த நிலையில்தான், கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது: அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?

ஏ1 ஊழல்
தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகள்
"ஏ1 ஊழல்" என்று யாரை குறிப்பிடுகிறார், திஹார் என்றும் பரப்பன அக்ரஹாரா என்று யாரை குறிப்பிடுகிறார் என்பதை நெட்டிசன்களும் புரிந்து வைத்துள்ளனர். 'ரெண்டு கட்சியை' இப்படி போட்டு தாக்குறியே தலைவா என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கமெண்ட் பாக்சில், சிலாகித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications