திமுகவில் இளைஞரணிக்கு ஈடாக மகளிர் அணி! கனிமொழி கையில் எடுத்துள்ள புதிய அஜெண்டா!
சென்னை: திமுக மகளிர் அணியில் 18 வயதிலிருந்து 30 வயதுடைய பெண்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க கனிமொழி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஏனோதானோ என்று இந்த விவகாரத்தில் செயல்படாமல், முழு ஈடுபாட்டுடன் இந்த அஜெண்டாவை செய்து முடிக்க வேண்டும் என மகளிர் அணி நிர்வாகிகளுக்கு அன்பு கட்டளை பிறப்பித்திருக்கிறார் கனிமொழி.
திமுக இளைஞரணிக்கு போட்டியாக மகளிர் அணியிலும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க கனிமொழி மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை ஆரோக்கியமான போட்டியாக கருதுகிறது திமுக தலைமை.
இதனிடையே மகளிர் அணியில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக கனிமொழி விடுத்துள்ள அறிவிப்பு பின்வருமாறு;
அப்போ டெல்டா..இப்போ ஓமிக்ரான்.. புதுசா இது என்ன டெல்மிக்ரான்? என்ன செய்யும்? முழு விளக்கம்
கொள்கை உறுதி
கொள்கை உறுதிகொண்ட இளைஞர்களாலும், எழுச்சிமிக்க பெண்களாலும் கட்டமைக்கப்பட்ட பேரியக்கம் நமது கழகம். நமது கழகத்தின் அடித்தளமாக விளங்கும் இளையர்கள் பலரை நம் கொள்கைகள் சென்றடையவும், நமது கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக இணைக்கவும் நம் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.12.2021 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
18 வயது டூ 30 வயது
தமிழகத்தின் மக்கள் தொகையில் சரிசமமான பங்குடையவர்கள் பெண்கள், அதிலும் நாளைய சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்கள் இன்றிருக்கும் 18-30 வயதுடைய இளம் பெண்கள். நமது கழகத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்த இளம் பெண்களின் பங்கு இன்றியமையாதது. திராவிட முன்னேற்ற கழகத்தின் மையக் கோட்பாடாக விளங்கும் சமூக நீதி சிந்தனையின் வெளிப்பாடே அரசியலில் பெண்கள் தனக்கென உரிமைகளை உருவாக்குவது.
புதிய உறுப்பினர்கள்
நமது கழக மகளிரணி அடுத்த தலைமுறைக்கான சுயசிந்தனை உடைய, உரிமைகளை உணர்ந்த இளம் பெண்களை உருவாக்க வேண்டும். அந்த விதத்தில் இன்றிருக்கும் 18-30 வயதிற்குள்ளான இளம் பெண்களை நமது கழகத்தில் 'மகளிரணி உறுப்பினர்களாக' இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அரசியலில் ஆர்வம் காட்ட துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்புகள் அளிப்பதைத் தாண்டி, நாம் 18-30 வயதிற்குள் உள்ள இளம் பெண்களை மகளிரணி உறுப்பினர்களாக இணைப்போம்.
பகிருங்கள்
மேலும், அவர்களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழி செய்து நமது கழகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம். இந்த முக்கியமான முயற்சியை நீங்கள் அனைவரும் இன்றே துவக்கி, இதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் சம்மந்தமான தகவல்களை அணித் தலைமையுடன் தினந்தோறும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.