செளமியா அன்புமணியுடன் பொங்கல் கொண்டாடிய கனிமொழி.. ஒருவேளை இருக்குமோ.. தேர்தல் வேற நெருங்குது!
சென்னை: சென்னையில் திமுக எம்பி கனிமொழியுடன் இணைந்து செளமியா அன்புமணி பொங்கல் விழாவில் பங்கேற்றிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. பாமக பிரிவுக்கு திமுகவே காரணம் என்று அன்புமணி குற்றம்சாட்டி வரும் சூழலில், செளமியா அன்புமணி கனிமொழியை சந்தித்து அளவளாவிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பாமகவை கைப்பற்றும் முனைப்பில் அன்புமணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் ராமதாஸ், பாமகவை உருவாக்கியதே நான்தான்.. எனக்கே கட்சி சொந்தம் என்று கூறி வருகிறார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற போதும், முடிவு எட்டப்படவில்லை.

ராமதாஸ் தரப்பில் பொதுக்குழு அமைக்கப்பட்டு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அன்புமணியும் கிட்டத்தட்ட அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டார். இதனிடையே பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு திமுகவும், ஜிகே மணியுமே காரணம் என்று அன்புமணி குற்றம்சாட்டி வருகிறார்.
அதேபோல் அன்புமணிக்கு ஆதரவாக செளமியா அன்புமணியும் பாமகவில் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின் அன்புமணியுடன் செளமியாவும் அதிகளவில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சூழலில், தற்போது தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவை திமுக எம்பி கனிமொழியுடன் இணைந்து செளமியா அன்புமணியும் கொண்டாடி இருக்கிறார். சென்னை சூளைமேட்டில் பத்திரிகையாளர்கள் சார்பாக பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இவர்களுடன் செளமியா அன்புமணியும் பங்கேற்றார். பொங்கல் விழாவில் அரிசி போடுவதற்காக கனிமொழி வந்த போது, செளமியா அன்புமணியையும் அவர் அழைத்து அரிசி போடுமாறு கூறினார்.
அரசியல் வேறுபாடுகளை களைந்து இரு கட்சிகளின் முக்கிய பெண் தலைவர்களும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல் சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜனுடன் இணைந்து கனிமொழி எடுத்த புகைப்படமும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications