மேகதாது.. கர்நாடக-தமிழக முதல்வர்களை ஆலோசனைக்கு அழைக்க வேண்டும்.. மோடியிடம் குமாரசாமி கோரிக்கை
சென்னை: மேகதாது அணை உள்ளிட்ட கர்நாடகாவிற்கு தொடர்புள்ள பல்வேறு நலத் திட்டங்கள், தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு கர்நாடக பவனில் நிருபர்களை, சந்தித்தார் குமாரசாமி. அப்போது அவர் கூறியதாவது:
மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வளத்துறை ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆனால், இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

கர்நாடக, தமிழக முதல்வர்கள், மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இரு மாநிலங்களின் ஒப்புதலுடன், பல வருடங்களாக நீடிக்கும் கருத்து வேறுபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடக விட அதிகமாக தமிழகத்திற்குதான் அதிகமான நலன் கிடைக்கும். எனவே அது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்.
இதேபோல மகதாயி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாமல் உள்ளோம். கோவா அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் மத்திய அரசு, மகதாயி நதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடவில்லை. இது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினோம் என்றார், குமாரசாமி.












Click it and Unblock the Notifications