காற்றடித்தால்.. அரசு வைக்கும் பேனர் கீழே விழாதா.. கார்த்தி சிதம்பரத்திற்கு வந்த சந்தேகம்!
சென்னை: அரசு பேனர் வைத்தால் மட்டும் கீழே விழாதா என்ன என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் அதிமுக நிர்வாகி வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அது போல் அரசியல் கட்சிகளும் இனி பேனர் வைக்க மாட்டோம் என சூளுரைத்தன.
இந்த நிலையில் சென்னையில் இந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்து பேசவுள்ளனர்.

இடையூறு
இதனால் அவர்களை வரவேற்க பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. இதையடுத்து அரசு சார்பில் பேனர் வைத்து கொள்ளலாம். அதுவும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் வைக்க வேண்டும்.

சுபஸ்ரீ
ஆனால் கட்சி சார்பில் பேனர் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. பேனர் கீழே விழுந்ததால்தான் சுபஸ்ரீ உயிரிழந்தார். அரசு சார்பில் பேனர் வைத்தால் மட்டும் கீழே விழாதா என கேள்வி எழுப்புகின்றனர்.

விசித்திரம்
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தந்தை ப.சிதம்பரம், கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டதே இதற்கு உதாரணம். அரசியல் கட்சிகள் பேனர் வைக்கக் கூடாது என தீர்ப்பளித்த நீதிமன்றம், அரசு விழாக்களில் பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பது விசித்திரமாக இருக்கிறது.

புனிதர்கள்
காற்றடிக்கும் போது அரசு சார்பில் வைக்கப்பட்ட பேனர் மட்டும் கீழே விழாதா என்ன. பாஜகவை எதிர்ப்பவர்கள், அந்த கட்சியில் சேர்ந்தால் புனிதர்களாகிவிடுவர் என பாஜக நினைக்கிறது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications