கருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்
கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் மகளுடன் வந்து வாக்களித்து விட்டு சென்றார்.
சென்னை: மறைந்த கருணாநிதியின் மனைவியும் முக ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள், கோபாலபுரம் வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்!
தயாளு அம்மாளுக்கு 82 வயதாகிறது. கொஞ்ச காலமாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கருணாநிதி தீவிர அரசியல் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்க ஆரம்பித்த காலத்திலேயே தயாளு அம்மாளுக்கும் உடல் நலம் சரியில்லாமல் போனது.

கருணாநிதி சென்னை, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தபோது தயாளு அம்மாள் அவரை சந்திக்க மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் வீல் சேரில்தான் அழைத்து வரப்பட்டார்.
கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின் வேட்பு மனுதாக்கல் செய்தபோது தயாளு அம்மாள்தான் விபூதி வைத்து ஆசி கூறி அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஓரிரு நாளிலேயே உடல்நிலை சரியில்லாமல் போய் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு, பிறகு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். அதன்பிறகு அவரை பற்றின தகவல் ஏதும் வரவில்லை.
இந்நிலையில் நீண்ட நாளைக்கு பிறகு தயாளு அம்மாளை பார்க்க முடிந்தது. பச்சை நிற சேலை அணிந்திருந்தார். வாக்களிப்பதற்காக மகள் செல்வி இவரை அழைத்து வந்திருந்தார். வீல் சேரில்தான் உட்கார வைக்கப்பட்டிருந்தார். வயோதிகம் காரணமாக, பார்க்கவே சோர்வாக இருந்தார். கருணாநிதி இல்லாமல் தயாளு அம்மாள் முதல் முறையாக வாக்களிக்க வந்தது திமுகவினரை கலங்க வைத்தது.












Click it and Unblock the Notifications