கருணாநிதி 3வது ஆண்டு நினைவு நாள் - ஓய்வறியா சூரியன் கடற்கரையில் ஓய்வெடுத்த நாள் இன்று - அஞ்சலி
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செல
சென்னை: திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். திமுக தொண்டர்கள் அவரவர் வீட்டில் இருந்தே மரியாதை செலுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் மூத்த தலைவர், மிகச்சிறந்த எழுத்தாளர், 5 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்த திமுக தலைவர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஓய்வறியா சூரியனாக பயணித்த மூத்த தலைவர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஓய்வெடுத்த நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் உடளள கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலையில் கருணாநிதி நினைவிடத்திற்கு வந்த மு.க ஸ்டாலின், எம்பி கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, டி.ஆர் பாலு மற்றும் மூத்த அமைச்சர்கள் நேரில் வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி வணங்கினர்.
திருக்குவளையில் தொடங்கிய கருணாநிதியின் பயணம்
1937ஆம் ஆண்டில் அரசுப்பள்ளிகளில் இந்திப் படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதனைக் கண்டித்து, நீதிக்கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. 13 வயதிலேயே கருணாநிதி இந்தப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். தன் பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, 'இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்ட அந்த சிறு வயதிலேயே 'மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1942ஆம் ஆண்டில் அண்ணா நடத்திய திராவிட நாடு பத்திரிகையில் கருணாநிதி எழுதிய இளமைப்பலி என்ற படைப்பு வெளியானது. அது அண்ணாவைப் பெரிதும் கவர, திருவாரூரில் ஒரு விழாவுக்காக வந்திருந்த அவர், கருணாநிதியை அழைத்துப் பாராட்டினார்.
1957ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்த கருணாநிதி, 13 முறை தமிழ்நாடு சட்டசபைக்கும் ஒரு முறை சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றியவர். 1967ஆம் ஆண்டில் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரான போது அவரது அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து திறம்பட பணியாற்றியவர்.
கருணாநிதி 1969 ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். அரசியல் மட்டுமன்றி, தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கியத் தளங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தனது 94 வயது வரைக்கும் ஓய்வறியாத சூரியனாக உழைத்த கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் கடற்கரையில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது மூன்றாவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் 7, ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற, வைர நெஞ்சம் கொண்ட தலைவர் கருணாநிதியை இயற்கை சதிசெய்து நம்மிடமிருந்து பிரித்த, பறித்த நாள். உடலால் அவர் பிரிந்தாலும் உடன்பிறப்புகள் மற்றும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
இயற்கையின் கரங்கள் கொய்து சென்ற நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதிக்கு இது மூன்றாம் ஆண்டு நினைவேந்தல். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் எல்லா நாளிலும், அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் இயக்கமில்லை.
தமிழே மூச்சாக, தமிழர் நலமே வாழ்வாகக் கொண்டு, 80 ஆண்டுகளைக் கடந்த பொதுவாழ்வு கண்டு, 94 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து, தமிழகத்தை வளம் பெறச் செய்து, இந்திய அரசியல் வானில் ஒளிவீசும் உதயசூரியனாகத் திகழ்ந்த மகத்தான தலைவர் கருணாநிதி.
அவர் தமது இறுதி மூச்சின்போது, இந்த மண்ணும், இதன் மக்களும் அனைத்துத் துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைந்துள்ளதாகத் திருப்தி அடைந்திருக்க வேண்டும். தமது நீண்டகால, ஆக்கபூர்வமான வாழ்க்கையில் தாம் விழித்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் மாநில மக்களின் சேவைக்காகவும் தேசத்தின் சேவைக்காகவும் செலவிட்டோம் என்பதும் அவருக்குத் திருப்தியளித்திருக்கும்.
'பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு முறையாகத் தீர்வு காணக்கூடியவராக, எத்தகைய கடினமான சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளாக இருந்தபோதும் அதைத் தீர்த்து வைக்கக் கூடியவராக கருணாநிதி விளங்கினார். நிர்வாகத் திறமை மிக்கவராகவும் இந்த பெரும் அவையில் விவாதங்களில் திறன்பட பங்காற்றியவராகவும் அவர் விளங்கினார்.
தமிழ் மொழியில் மிகச் சிறந்தவராக விளங்கிய அவர், தனது அரசியல் எதிரிகளையும் அதன் மூலம் கவர்ந்தார். மக்களுக்கான முதல்வர் என்று சொல்லக்கூடிய வகையில், பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், குடிசை மாற்றுத் திட்டங்கள், நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதல், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது, சாதி ஒழிப்புக்காக சமத்துவபுரங்கள் உருவாக்கியது என, ஏழ்மையில் உள்ளவர்களுக்கான பலவற்றை நிறைவேற்றியவர் கருணாநிதி.
உயிர்நிகர் தலைவர் கருணாநிதி நம்மிடையே உலவவில்லை என்றாலும், உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் அவர் நமக்கு ஊட்டிய உணர்வு நம் குருதியோட்டத்தில் கொள்கையோட்டமாக இருக்கிறது. அவர் காட்டிய பாதை, அவர் அளித்த பயிற்சி, அதனால் அமைந்திருப்பதும் அவரது ஆட்சி என்பதை நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டுதான் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' ஆகிய நான் முதல்வர் பொறுப்பினை ஏற்றேன்.
'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' எனத் தலைவர் கருணாநிதி வகுத்தளித்த நெறியின்படி, மாநிலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், பேரிடர் சூழலிலும் தமிழக மக்களுக்கு அரணாக இருந்து, திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தலையாய கடமையாகக் கொண்டு செயலாற்றுகிறேன். நெஞ்சில் நிறைந்துள்ள தலைவர் கருணாநிதியிடம் அதற்கான வழியினைக் கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து அதற்கான வலிமையையும் பெற்றிருக்கிறேன். உடன்பிறப்புகளாம் உங்களின் துணையுடனும், தமிழக மக்களின் பேராதரவுடனும் தலைவர் கருணாநிதி வழியில் திமுக அரசின் பயணம் தொடரும் என்பதை அவரது மூன்றாம் ஆண்டு புகழ்வணக்க நேரத்தில் உறுதிமொழிகிறேன்.
Recommended Video
உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்பே இந்தப் பயணத்திற்கு வலு சேர்க்கும். கருணாநிதிக்குப் புகழ் சேர்க்கும். கொரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை முறையாகக் கடைப்பிடித்து, ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் தலைவர் கருணாநிதியின் படத்தினை வைத்து, மாலையிட்டு, மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டுகிறேன். பெரு விழாக்கள் வேண்டாம். அலங்காரங்கள், ஒலிபெருக்கிகளைத் தவிர்த்திடுவீர். நம் நெஞ்சங்களிலும் நினைவுகளிலும் நிரந்தரமாக இருந்து, நாட்டை வழிநடத்தும் கருணாநிதிக்கு வீடுகள்தோறும் மரியாதை செலுத்திடுவோம். அவர் வகுத்த பாதையில் பயணித்து தமிழகத்தை மாண்புறச் செய்திடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications