கடலுக்கு நடுவே கருணாநிதி பேனா நினைவு சின்னம்- நாளைய கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கும் சீமான்!
கருணாநிதி பேனா நினைவு சின்னம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் நாளை சீமான் கலந்து கொள்கிறார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான நாளைய பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்தில் தாம் பங்கேற்க இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்துத் துறை பங்களிப்புக்காக தமிழ்நாடு அரசுசார்பில் அவருக்கு மெரினாவில் பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை இந்த நினைவுச் சின்னத்தை அமைக்க உள்ளது.

பேனா நினைவு சின்ன பீடமானது 2,263 சதுர மீட்டர், நடைபாலமானது 2,073 சதுர மீட்டர், பின்னல் நடைபாலமானது 1856 சதுர மீட்டர் பரப்பளவில் என அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 8,551 சதுர மீட்டர் பரப்பளவில் கருணாநிதிக்கான பேனா நினைவு சின்னம் எழுப்பப்படுகிறது. இந்த நினைவுச் சின்ன பீடத்தில் கருணாநிதியின் பொன்மொழிகள் இடம்பெறும். கருணாநிதியின் நினைவிடத்தின் உள்ளே இருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரம் நடந்து சென்று பேனா நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளது. ரூ.81 கோடியில் பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் .
இந்த நினைவுச் சின்னம் முழுவதுமே கடலில் அமைய உள்ளது. ஆகையால் முறைப்படி கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிப்படி அனுமதி பெறப்பட வேண்டும். இது தொடர்பாக மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் ஏற்கனவே தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருக்கிறது. இந்த விண்ணப்பமானது தற்போது தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் உள்ளது.

கடலுக்குள் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த விதிகளின் படி தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வரும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நாளை பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் தாம் பங்கேற்க உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிவிப்பு:மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன். சின்னக் கலைவாணர் அரங்கம், திருவல்லிக்கேணி, சென்னை. நாள்: சனவரி 31, 2023 (நாளை) காலை 10.30 மணி, நாம் தமிழர் கட்சிப் பிள்ளைகளும் பெருந்திரளாய்க் கலந்துகொள்ள இருக்கின்றனர். கடல் சூழலியல் குறித்த அக்கறையுள்ள அனைவரும் பங்குபெறலாம். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை மிக கடுமையாக தொடக்கம் முதலே எதிர்த்து வருபவர் சீமான். இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சீமான், : கடலில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை நிறுவ விட முடியாது.. அதெல்லாம் முடியாது.. நிறுவ நான் விடப்போவதும் இல்லை. அப்புறம் கண்ணாடி உள்ளே வைப்பீங்க.. இப்ப உதயநிதி முதலமைச்சராகிவிட்டால் எங்க அப்பா விக் வைத்திருந்தார் என கடலுக்குள் விக் வைப்பீங்களா? இது எல்லாம் தேவை இல்லாத சேட்டை. இது எல்லாம் யாரு காசு? பேனா வைக்கிறேன்..நோட் வைக்கிறேன்னு.. ஏ.. நீ சமாதியில் வடை, காபி வைக்கிறதையே திட்டிகிட்டு இருக்கேன் நானு.. இதெல்லாம் கொழுப்புங்க.. இதெல்லாம் ஊடகங்கள்தான் பேசனும். ரூ39 கோடிக்கு சமாதி.. அந்த ரூ39 கோடியில் சமாதியை கட்டி முடிப்பாரா? அதற்கு கணக்கு காட்டுவாரா? அறிக்கை விடுவாரா? சரியா ரூ39 கோடியில் முடிச்சுட்டேன்னு சொல்வாரா? யார் காசு இது? எங்கப்பனுக்கு நான் சமாதி கட்டுறேன்.. நினைவிடம் கட்டுறேன்.. என் காசுல கட்டுறேன்.. அப்படி கட்டுங்க.. அரசு காசில் பேனா வைக்கிறேன்.. அவர் பென்சில் வைச்சிருந்தார்னு பென்சில் வைக்கிறேன்.. இதெல்லாம் சேட்டை தானே.. வைக்கட்டும்..அப்புறம் பார்க்கலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications