மேட்டருக்கு வந்த கருணாஸ்.. "ஆமா.. அதனால்தான் அதிமுக தோற்றது.. ஆனா திமுக கை கொடுத்தால்.. பரபர பேச்சு!
முக ஸ்டாலினுக்கு கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: தேர்தலில் பணம் வாங்காமல் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நடிகர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, கூடவே ஒரு முக்கியமான விஷயத்துக்கும் "நூல்" விட்டுள்ளார்!
முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், நடிகருமான கருணாஸ் திருச்சி வந்திருந்தார்.. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சொன்னதாவது:
"சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான முக்குலத்தோர் சமூகத்தை அதிமுக புறக்கணித்தது. அதனால் அந்த சமூக மக்களின் கோபம் வாக்குகளாக மாறியுள்ளது.முக்குலத்தோர் சமூதாயங்களை ஒன்றிணைத்து தேவர் என அழைக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை நான் அதிமுக அரசிடம் பல முறை வலியுறுத்தினேன். போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.
மக்கள் இயக்கமாக மாறி... கொரோனா பரவலை தடுப்போம்... மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!
சமுதாயம்
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். தற்போது தென் மாவட்டங்களில் திமுக பெற்றுள்ள வெற்றி தொடர வேண்டுமென்றால், முக்குலத்தோர் சமுதாயத்தின் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி அவர் நிறைவேற்றி கொடுத்தால் எனது வாழ்நாள் முழுவதும் அவருக்கு விசுவாசமாக இருப்பேன்.
எதிர்காலம்
தற்போதைய தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை. பணநாயக தேர்தலாகவே அமைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் சாமானியர்கள் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது. செல்வந்தர்கள், பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். கவுரவ பதவியாக சட்டப்பேரவை உறுப்பினர் பதவி மாறிவிடும் நிலை உள்ளது. இதன் மீது தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்.
மறியல்
தேர்தலுக்கு சரியான முறையில் பணப்பட்டுவாடா செய்யவில்லை என்று மக்கள் சாலை மறியலில் ஈடுபடும் அவல நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையிலும் பணம் வாங்காமல் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு வாக்களித்த 40 லட்சம் வாக்காளர்களுக்கு எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலை தொடர வேண்டும்.
பணம்
தொடர்ந்தால் 2026-ம் ஆண்டு தேர்தலில் ஒரு கோடி பேர் இப்படி பணம் வாங்காமல் வாக்களிக்க கூடிய நிலை உருவாகும். பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஓட்டு போடுவோம் என்ற நிலைமாறி பணம் கொடுக்காதவர்களுக்கும் ஓட்டு போடுவோம் என்பதற்கு இது உதாரணமாக அமைந்துள்ளது.ஓட்டுப்போட பணம் உரிமையாக கேட்பது வெட்கக்கேடான செயலாகும்.
அதிகார பதவி
அதிகார பதவி என்ன விலை என்றாலும் அதை கொடுத்து வாங்க அனைவரும் தயாராக உள்ளனர். இத்தகைய பணப்புழக்கத்திற்கு நடுவே கமல், சீமான் ஆகியோர் நேர்மையான முறையில் தேர்தலை சந்தித்தது பாராட்டுக்குரியது. வாய்ப்பு கிடைத்தால் எதிர்காலத்தில் அவர்களோடு இணைந்து செயல்படுவோம்" என்று கூறியுள்ளார்.
வாழ்த்து
கருணாஸின் இந்த பேட்டியில் 2 விஷயங்கள் உற்று பார்க்கப்படுகிறது.. ஒன்று, ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, "முக்குலத்தோர் சமுதாயத்தின் 12 அம்ச கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றி கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் அவருக்கு விசுவாசமாக இருப்பேன்" என்று தெரிவித்து அதிமுகவுக்கான எதிர்ப்பை, இதன்மூலம் ஆழமாக பதிவு செய்துள்ளார்.
கமல், சீமான்
மற்றொரு விஷயம், வாய்ப்பு கிடைத்தால் எதிர்காலத்தில் கமல், சீமானோடு இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.. இப்போதைக்கு அதிமுக, திமுக என யார் பக்கமும் ஆதரவு இல்லாத நிலையில், சசிகலாவும் இன்னும் தன் அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்காத நிலையில், இப்போதே வரப்போகும் தேர்தலுக்கு ஒரு அச்சாரத்தை அழுத்தமாக போட்டுவிட்டாரோ கருணாஸ் என்ற முணுமுணுப்புகள் எழ ஆரம்பித்துள்ளன.