TVK Vijay: தலைமறைவான புஸ்ஸி ஆனந்த்.. நேரடியாக மாவட்டச் செயலாளர்களுடன் பேசிய விஜய்.. என்ன நடந்தது?
சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் பதிவிடுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால், அவர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மூலமாக சட்ட உதவிகளை செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தவெக மாவட்டச் செயலாளர்களுடன் வாட்ஸ் அப் காலில் பேசிய விஜய், கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம், புதிய உத்வேகத்துடன் பணியாற்றுங்கள் என்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் விஜய் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தவெகவினரும் தலைமறைவாகினர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கின்றனர்.

ஆனால் இதுவரை தவெக சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒருவர் கூட சென்று சந்தித்து ஆறுதல் கூறவில்லை. ஒரேயொரு வீடியோவை மட்டும் வெளியிட்டுவிட்டு விஜய், வீட்டில் இருக்கிறார். இதனால் தவெக மாவட்டச் செயலாளர்கள் சோர்ந்து போயுள்ளனர். அதேபோல் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக இருப்பதால், அவர்களை உற்சாகப்படுத்த விஜய் முக்கிய முடிவு ஒன்றை எடுத்து செயல்படுத்தி இருக்கிறார்.
தவெக மாவட்டச் செயலாளர்களுடன் வாட்ஸ் அப் காலில் விஜய் பேசி இருக்கிறார். அந்த உரையாடலின் போது, விஜய் கரூர் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தவெகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகளுக்காக 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டச் செயலாளர்களிடம் விஜய் பேசுகையில், கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம், புதிய உத்வேகத்துடன் பணியாற்றுங்கள் என்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சோசியல் மீடியாவில் தவெகவுக்கு ஆதரவாக பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்களுக்கு சட்ட உதவிகளை மாவட்டச் செயலாளர்கள் மூலமாகவும், வழக்கறிஞர் அணி மூலமாகவும் செய்ய அறிவுறுத்தி இருக்கிறார். விஜய்யின் இந்த செயல்பாடு தவெக மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் ஓரளவிற்கு எடுபட்டுள்ளது.
ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் மாவட்டச் செயலாளர்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது புரியாமல் தவித்து நிற்கின்றனர். இதனால் நேரடியாக விஜய் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications