ஸ்டெர்லைட் முதல் அஜித் குமார் வரை.. நேரில் ஆறுதல் சொன்ன விஜய்.. ஒரு வாரமாகியும் கரூர் செல்லாதது ஏன்?
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு வாரம் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறாதது விமர்சனத்தை பெற்று வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், நீட் தேர்வால் அனிதா மரணம், அஜித் குமார் லாக் அப் மரணம் உள்ளிட்ட சம்பவங்களின் போது விஜய் தனியாளாக சென்று ஆறுதல் கூறிய நிலையில், கரூர் சம்பவத்திற்கு மட்டும் அமைதி காப்பது ஏன் என்றும் பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வந்தார். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் மற்றும் கரூர் என்று 6 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் கடந்த வாரம் கரூரில் நடந்த பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் 3 நாட்களுக்கு பின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்போ, வருத்தமோ விஜய் கேட்கவில்லை. அதற்கு பதிலாக, சிஎம் சார்.. என்னை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் என்று சவால் விடுத்தார்.
இதன்பின் நீதிமன்றம் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக சாடியது. விஜய்யிடம் தலைமைக்கான பண்பு இல்லை என்று கூறிய நீதிபதி, தவெக என்ன மாதிரியான கட்சி என்றும் கேள்வி எழுப்பினார். கரூரில் பாதிப்பு தொடங்கிய பின் உடனடியாக தவெகவின் அத்தனை நிர்வாகிகளும் மறைந்துவிட்டனர் என்றும் கருத்து தெரிவித்தார். இதனிடையே விஜய் கரூர் செல்ல தடை இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் இடையே கூறப்பட்டது.
ஆனால் விஜய்க்கு அப்படி எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரம் நிகழ்ந்து ஒரு வாரமாகிவிட்டது. ஆனால் விஜய் இதுவரை பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்திக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது விஜய் உடனடியாக ஸ்னோலின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு உதவிகள் செய்வதாகவும் உறுதி கொடுத்தார்.
தொடர்ந்து நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் வீட்டிற்கும் சென்று நலம் விசாரித்தார். அண்மையில் கட்சி தொடங்கிய பின் அஜித் குமார் லாக் அப் மரணத்தின் போது, திடீரென தனியாக அவரின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.2 லட்சம் உதவியையும் செய்தார். ஆனால் கரூர் விவகாரம் நடந்து ஒரு வாரம் கடந்த பின்னரும் கூட விஜய் இதுவரை பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை.
இதனால் எதிர்க்கட்சிகளால் நடந்த சம்பவங்களுக்கு உடனடியாக நேரில் செல்லும் விஜய், தன்னால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்ல தயக்கம் காட்டி வருவதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தவெக தலைவர் விஜய் விரைவில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுவது அவரின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications