யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு! கரூர் விவகாரத்தில் கைதானதாக கூறப்பட்ட வழக்கில் திருப்பம்
சென்னை: பிரபல யூடியூபர் மாரிதாஸை சென்னையில் வைத்து சைபர் கிரைம் போலீசார் இன்று மதியம் அதிரடியாக கைது செய்ததாக தகவல் வெளியானது.சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து அவரை போலீசார் அழைத்து சென்ற நிலையில் விசாரணை பிறகு சம்மன் வழங்கி அனுப்பி வைத்தனர்.
கரூர் வேலுசாமி புரத்தில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தலைமறைவாக உள்ளனர். இவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் அடுத்தடுத்து கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. மாறாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமின்றி தவகெ தலைவர் வியிடம் தலைமைத்துவ பண்பு இல்லை. விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்து இருக்க வேண்டாமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியது.
அதேபோல் மதுரை உயர்நீதிமன்றத்தை எடுத்து கொண்டால் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் முன்ஜாமீன் கொடுக்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தது. மொத்தத்தில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்குகள் தவெக தலைவர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
இந்நிலையில் தான் பிரபல யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். நீதிமன்ற வழக்கில் திமுக எப்படி பிளான் போட்டு செயல்பட்டது? என்பது தொடர்பாக அவர் தனது கருத்தை பதிவிட்டு இருந்தார். அதோடு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு திமுகவின் நாடகம் நடந்துள்ளது. உடனடியாக விஜய் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த பதிவில் திமுக ஒரு தீய சக்தி என்று கூறியிருந்தார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்தின் திமுக நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக இன்று வெளியிடப்படும் என்றும் அவர் இன்னொரு பதிவில் கூறியிருந்தார். அதன்பிறகு மாரிதாஸ் இன்று மதியம் 1.03 மணிக்கு போட்ட பதிவில், ‛‛என் இல்லத்துக்கு காவல்துறை கைது செய்ய வந்துள்ளது'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் மாரிதாஸை இன்று போலீசார் அழைத்து சென்றனர். அவரை கைது செய்ததாக தகவல்கள் வெளியானது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்குகள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார். விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என்று சம்மன் வழங்கி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாரிதாஸ் தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் இதற்கு முன்பும் கைது நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளார். இப்போது மீண்டும் நீதிமன்றம் தொடர்பாக திமுக பற்றிய பதிவால் சிக்கலில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications