காசி தமிழ் சங்கமம்.. பிரதமர் மோடியின் ‛ஒரு பாரதம்-உன்னத பாரதம்’ நனவாகும்.. வானதி சீனிவாசன் உற்சாகம்
சென்னை: உத்தர பிரதேசம்-தமிழ்நாடு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் ‛‛காசி தமிழ் சங்கமம்'' நிகழ்ச்சி நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 16ம் தேதி வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது. இதனை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வரவேற்றுள்ள நிலையில் உத்தர பிரதேசம்-தமிழ்நாடு இடையேயான சகோதரத்துவத்தை வலுப்படுத்த முடியும் எனவும், பிரதமர் மோடியின் ஒரு பாரதம்-உன்னத பாரதம் கனவை இது நனவாக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு, உத்தர பிரதேச மாநிலம் காசிக்கும் இடையே பல நூற்றாண்டு கால தொடர்பு உள்ளதாகவும், இதனை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து தமிழகத்துக்கும் காசிக்கும் இடையேயான தொடர்புகளை உறுதிப்படுத்தும் வகையில் ‛காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
அதன்படி ‛காசி தமிழ் சங்கமம்' என்ற இணையதளத்தை மத்திய அரசு துவங்கி உள்ளது. இந்த இணையதளத்தை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவங்கி வைத்தார். இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் டெல்லியில் பேசுகையில், ‛‛தமிழகத்துக்கும், காசிக்கும் பழங்கால தொடர்பு உள்ளது. இதனை புதுப்பிக்கும் வகையில் நவம்பர் 16 முதல் டிசம்பர் மாதம் 16 வரை ‛காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

2,500 பேர் பங்கேற்க வாய்ப்பு
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,500க்கும் அதிகமானவர்கள் பங்கேற்க உள்ளனர். ராமேஸ்வரம், கோவை, சென்னை உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வணிகம், கலை, இலக்கியம் தொடர்பான குழுக்களாக இவர்கள் ரயில்களில் பயணித்து காசியில் நடக்கம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

வானதி சீனிவாசன் வரவேற்பு
மத்திய அரசின் இந்த முடிவை தமிழக பாஜகவினர் வரவேற்றுள்ளனர். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜகவின் மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடியின் கனவு நனவாகும்
‛‛பிரதமர் மோடி அரசு ‛காசி தமிழ் சங்கமம்' நிகழ்வை முன்னெடுத்துள்ளது. இதன்மூலம் இருமாநில உறவை வலுப்படுத்தி 'ஒரு பாரதம், உன்னத பாரதம்' எனும் பிரதமர் மோடியின் கனவை நனவாக்க முடியும். இதில் கலாசாரம், மதம், தொழில், உணவு, கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவை குறித்து உத்தர பிரதேசம், தமிழ்நாடு இடையே பரிமாற்றங்கள் இருக்கும். மேலும் உணவு, நாட்டுப்புற கலை, கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் ஒரேநேரத்தில் நடக்கும். இது போன்ற நிகழ்ச்சிகள் சகோதரத்துவத்தை இயற்கையான முறையில் வலுப்படுத்தும். இத்தகைய தனித்துவ முயற்சிக்கும் பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதானுக்கு நன்றி'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications