மகனே மனோஜ்! பாரதிராஜாவின் பாதி உயிரே! உன் தகப்பனை எப்படி தேற்றுவேன்? வைரமுத்து இரங்கல்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி உயிரிழந்துள்ள நிலையில் அவருடைய இறப்புக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் பாரதிராஜாவின் பாதி உயிரே என மனோஜை, வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி, மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 48. அவருக்கு சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் திடீரென வந்த மாரடைப்புக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த மனோஜுக்கு நேற்று மாலை திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே மறைந்துவிட்டார் என தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு சேத்துப்பட்டில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அங்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நள்ளிரவு முதல் பலர் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தனது மகனின் உடலை பார்த்து பாரதிராஜா கதறி கண்ணீர் விட்ட காட்சிகள் பார்ப்போர் மனதை கரையச் செய்தன. அவரை அருகிலிருந்தவர்கள் தேற்றி ஆசுவாசப்படுத்தினர். 83 வயதில் புத்திர சோகம் என்பது தாள முடியாதது, இதை பாரதிராஜா எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற பரிதவிப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், வைகோ எம்பி, கனிமொழி எம்பி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரான வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மகனே மனோஜ்!
— வைரமுத்து (@Vairamuthu) March 26, 2025
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன்… pic.twitter.com/ngB7b1Crel
மகனே மனோஜ்!
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன் செய்யக்
கடமைப்பட்டவனே!
உனக்கு நான் கடன்செய்வது
காலத்தின் கொடுமைடா" என்று
தகப்பனைத் தவிக்கவிட்டுத்
தங்கமே இறந்துவிட்டாயா?
உன் கலைக் கனவுகள்
கலைந்து விட்டனவா?
முதுமை - மரணம் இரண்டும்
காலத்தின் கட்டாயம்தான்.
ஆனால், முதுமை
வயதுபார்த்து வருகிறது;
மரணம் வயதுபார்த்து
வருவதில்லை
சாவுக்குக் கண்ணில்லை
எங்கள் உறக்கத்தைக்
கெடுத்துவிட்டவனே!
உன் உயிரேனும்
அமைதியில் உறங்கட்டும்
இவ்வாறு வைரமுத்து தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மனோஜ் நடித்த தாஜ்மகால் படத்திற்கு வைரமுத்துதான் பாடல்களை எழுதினார். திருப்பாச்சி அரிவாள தூக்கிகிட்டு வாடா வாடா பாடலில்தான் அவர் குறிப்பிட்ட "சிங்கம் பெத்தபிள்ளையினு" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த படம் 1998ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸானது. இரு கிராமங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பகைமை குறித்தும் அந்த கிராமத்தில் மாயன்- மச்சக்கன்னி ஆகியோரது காதல் குறித்தும் விளக்குவதுதான் கதை! மனோஜின் தந்தை நிறைய பேரை அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவர் மகன் ஏன் சோபிக்கவில்லை என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications