பிரிவினைவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் - பினராயி விஜயன் பேச்சு
சென்னை: நம்மை பிரித்து ஒடுக்கிற சக்திகளுக்கு எதிராக நாம் இணைந்து போராடுவோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், நடிகர் சத்யராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துறை வழங்கி வருகின்றனர்.

பினராயி விஜயன்
தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், ''இந்த நிகழ்ச்சியில் ஒரு மலையாளியாக வந்து பங்கேற்கிறேன். தமிழர்களும் மலையாளிகளும் இந்த மண்ணின் மைந்தர்கள். கேரளா, தமிழ்நாடு இடையே பன்னெடுங்கால உறவு தொடருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியது திராவிடர் இயக்கம். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியது திராவிடர் இயக்கம்.

முக ஸ்டாலின்
சென்னை மாநகர தந்தை, உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என படிப்படியாக உயர்ந்தவர் ஸ்டாலின். கூட்டாட்சி மீது தாக்குதல் நடத்தப்படும் போது முதல் குரல் கொடுப்பவர் ஸ்டாலின். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் போராட்டம் தொடர வேண்டும். மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் என்பது தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாறு குறித்தது.

இணைந்து போராடுவோம்
உங்களில் ஒருவன் நூல் எப்படி திராவிடர் இயக்கம் இளைஞர்களை ஈர்த்தது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த புத்தகம் சிறு துளி தான். இன்னும் பல பாகங்கள் வெளி வர வேண்டும். அப்போது தான் இந்த வரலாறு எல்லோருக்கும் தெரியும். பன்முகத்தன்மை, கூட்டாட்சி பாதுகாப்பதில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம். நம்மை பிரித்து ஒடுக்கிற சக்திகளுக்கு எதிராக நாம் இணைந்து போராடுவோம்.

நல்லுறவு
கேரளாவுடனான நல்லுறவு தொடர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்து வருகிறார். கூட்டாட்சி மற்றும் அரசியலமைப்புக்கு ஆபத்து வரும் போதெல்லாம், ஸ்டாலின் குரல் கொடுக்க தவறியதில்லை. இந்த இடத்துக்கு ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்து வந்தவர் ஸ்டாலின்'' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.












Click it and Unblock the Notifications