நெல்லை ரயிலில் சார்ஜிங் போர்ட் வேலை செய்யல.. புகாரளித்த பயணிக்கு 15 நிமிடத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்
சென்னை: நெல்லையில் இருந்து வடமாநிலம் செல்லும் ரயிலில் சார்ஜிங் போர்ட் வேலை செய்யாததால், கேரள இளைஞர்கள் சிலர், ரயில்வே ஹெல்ப் லைனுக்கு புகாரளித்தனர். எங்கே பலன் கிடைக்க போகிறது என்று யோசித்துக்கொண்டே அந்த இளைஞர்கள் இருந்த நிலையில், புகாரளித்த 15-வது நிமிடத்தில் அந்த இளைஞர்களுக்கு ரயில்வே நிர்வாகம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரயில், பேருந்து பயணத்தின் போது தற்போது பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு வசதியாக நினைப்பது சார்ஜிங் செய்ய முடியுமா? என்பதுதான். அனைவர் கைகளிலும் செல்போன்கள் இருப்பதால், பயணத்தின் போது சார்ஜிங் செய்யும் வசதி இருந்தால் பயணத்தை நிம்மதியாக கழித்துவிடலாம் என நினைப்பதுண்டு.

சார்ஜிங் போர்ட் வேலை செய்யவில்லை
ஏனெனில், தற்போது எல்லாம் எதிரில் இருக்கும் பயணிகள் முகம் கூட பார்க்காமல் பலரும் செல்போனிலேயே மூழ்கி கிடப்பதை பார்க்க முடிகிறது. அப்படியான சூழலில் ரயிலில் தங்கள் இருக்கை அருகே சார்ஜிங் போர்ட் வேலை செய்யவில்லை என்றால் மொத்த பயணமும் அப்செட் ஆகிவிடும். சார்ஜிங் போர்ட் வேலை செய்யவில்லை என்றால் யாரிடம் போய் புகாரளிப்பது...
புகாரளித்தால் மட்டும் சரி செய்துவிடுவார்களா? என பயணிகள் நினைத்துவிட்டு, பலரும் கண்டுகொள்ளாமல் செல்வார்கள். பயணிகளுக்கான சேவை வழங்குவதில் ரயில்வே நிர்வாகம் முன்பு போல இல்லை, தற்போது வேற லெவலில் அப்டேட் ஆகியிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் கேரளாவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
ஹெல்ப் லைனுக்கு போன் செய்த இளைஞர்
கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருநெல்வேலியில் இருந்து ஜாம்நகர் வரை செல்லும் டென் ஜாம் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் நம்பர் 19577) பயணம் செய்தனர். ரயிலுக்குள் ஏறியதும் தங்கள் டிக்கெட் எண்ணை வைத்து இருக்கையை கண்டுபிடித்து இளைஞர்கள் அமர்ந்தனர். சிறிது நேரத்தில், அதில் ஒரு இளைஞர் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டார். ஆனால், சார்ஜிங் ஏறவில்லை. இதனால் அப்செட் ஆன இளைஞர்கள் உடனடியாக ரயில்வே ஹெல்ப்லைனுக்கு கால் செய்து, சார்ஜிங் வேலை செய்யவில்லை என்று புகாரளித்தனர்.
அப்போது மறுமுனையில் பேசிய ரயில்வே ஊழியர்கள் கோச் எண், இருக்கை எண், பி.என்.ஆர் எண் ஆகியவற்றை கேட்டு உறுதிப்படுத்தினர். போனை வைத்த 5 நிமிடத்தில் ரயில்வே டெக்னிஷியன் அந்த பெட்டிக்கு வந்து சில நிமிடங்களில் சார்ஜிங் போர்ட்டில் உள்ள கோளாறை சரி செய்தார். இதையெல்லாம் அந்த இளைஞர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
ரயில்வேயை பாராட்டி நெட்டிசன்கள் புகழாரம்
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் பலரும் வியந்து பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. இது புதிய இந்தியா ரயில்வே, வேகமானது, பயணிகளுக்கு ஏற்றது" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "சார்ஜிங் பிரச்சினையை உடனடியாக சரி செய்த ரயில்வே ஊழியர்களின் பணி பாராட்டுக்குரியது.
சிறிய செயல்கள் கூட எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சிறந்த உதாரணம்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "வெயிட்... 15 நிமிடத்தில் இந்திய ரயில்வே பிரச்சினையை சரி செய்துவிட்டதா? அந்த பயணி 139 (புகார் எண்) க்கு கால் செய்யவில்லை, அவெஞ்சர்ஸ் ஹாட்லைனுக்கு கால் செய்து இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications