8 வயதில் பாலியல் சீண்டல்.. தாயிடம் சொன்னால்.. பிளாக்மெயில் செய்த தந்தை.. கலங்கிய நடிகை குஷ்பு
சென்னை: என் தாய் வாழ்வில் கஷ்டப்படுவார் என என்னை பாலியல் துன்புறுத்தல் செய்த என் தந்தையால் நான் மிரட்டப்பட்டேன் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மனம் திறந்து பேசியுள்ளார்.
தனியார் சேனல் நடத்திய ரைசிங் இந்தியா மாநாட்டின் இரண்டாம் நாள் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணைய நிர்வாகியுமான நடிகை குஷ்பு சுந்தர் கலந்து கொண்டார்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேசிய குஷ்பு, என் மீது நிறைய பொறுப்புகள் இருந்தன. அது என்னை எனது தந்தை கொடுத்த பாலியல் தொல்லை குறித்து பேச அனுமதிக்கவில்லை. நான் அது குறித்து யாரிடமும் சொல்லவும் இல்லை.

குடும்பம்
என் குடும்பத்தில் உள்ள என் தாய், மூன்று சகோதரர்களும் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாதவர்கள். என் அம்மாவை அப்பா அவ்வப்போது அடித்துத் துன்புறுத்தியதை நான் நேரில் கண்டேன். அதையும் அதுபோல் எனக்கு என் தந்தை பாலியல் தொல்லை கொடுப்பது குறித்தும் நான் வெளியே சொன்னால் என் அம்மாவும் , 3 சகோதரர்களும் கடுமையாக பழிவாங்கப்படுவார்கள் என என்னை மிரட்டினார் என் அப்பா.

பேசவிடாமல் தடுத்தது எது
அந்த பயம் என்னை பேசவிடாமல் தடுத்தது. ஆனால் இது நிறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கும் போது எப்போதும் வெகு தூரம் இருக்காது என குஷ்பு தெரிவித்தார். தனது தந்தைக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தலை நான் எதிர்க்கும் போது என் தந்தை என் குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார் என குஷ்பு தெரிவித்தார். சிறு வயதில் தான் தன் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டேன் என நடிகை குஷ்பு இந்த மாத தொடக்கத்தில் பகீர் தகவலை அளித்திருந்தார்.

கொடூரமான நாட்கள்
தனது தாய்க்கு மிகவும் கொடூரமான திருமண நாட்கள் என்றும் ஒரு ஆண் தான் ஆண் என்பதால் மனைவியையும் குழந்தைகளையும் அடித்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தனது பொறுப்பை துஷ்பிரயோகம் செய்யலாம் என நினைத்தார். அது தனது பிறப்புரிமை என அவர் நினைத்துள்ளார். ஒரு மனிதனாக இருந்து அவ்வாறு செய்வது தனது உரிமை என்றும் அவர் நினைத்திருந்தார் என தனது ஆதங்கத்தை குஷ்பு பதிவு செய்திருந்தார்.

பாலியல் தொல்லை
மேலும் பெண்கள் தனக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியும். அவர்களால் இன்னொரு பெண்ணுக்கு இந்த கொடுமை நடப்பதும் தடுக்கப்படும் என குஷ்பு தெரிவித்துள்ளார். 8 வயது முதல் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான தனக்கு அதை எதிர்க்கும் துணிச்சலும் தைரியமும் 15 வயதில்தான் வந்தது. எனக்கு 16 வயது ஆவதற்கு முன்பே அவர் எங்களை விட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர் எங்களுக்கு உணவு எப்படி வந்தது என்பது கூட தெரியவில்லை என குஷ்பு கலங்கியபடி தெரிவித்தார்.

நம்புவார்களா என்ற பயம்
தன்னிடம் அப்பா இப்படி செய்கிறார் என குடும்பத்தில் கூறினால் அவர்கள் என்னை நம்புவார்களா என்ற பயம் இருந்தது. இதனால் பல ஆண்டுகளாக வாயை மூடிக் கொண்டிருந்தேன். என்னை போல் யாரும் இருக்காதீர்கள். தைரியமாக தட்டி கேளுங்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள குஷ்பு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications