குரு பெயர்ச்சிக்கு முன் நிகழ்ந்த குஷ்பு பெயர்ச்சி : காங்கிரஸில் இருந்து பாஜக போனது ஏன்?
குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பெயர்ச்சியாகி பாஜகவில் சேரப்போவதாக வெளியானதுதான் பரபரப்பான தகவலாக உள்ளது.
சென்னை: குரு பெயர்ச்சி இன்னும் சில வாரங்களில் நிகழ உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு பெயர்ச்சியாகி பாஜகவில் சஞ்சரிக்கப்போகிறார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார் குஷ்பு. குஷ்பு பாஜகவில் இணைய முடிவு எடுக்கும் முன்பு நீண்ட யோசனை செய்திருப்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு தனது கணவர் சுந்தர் சி உடன் விமான நிலையத்திற்கு வந்த போது அவரை சூழ்ந்த செய்தியாளர்கள், நீங்க பாஜகவில் சேரப்போவதாக சொல்கிறார்களே என்று கேட்க அதற்கு நோ கமெண்ட் என்று சொன்னார். இப்போதும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கும் இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லி விட்டு கணவர் சுந்தர் சி உடன் விமானத்தில் பறந்தார் குஷ்பு.
குஷ்பு டெல்லி சென்ற அதே நேரத்தில் குஷ்புவின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியை பறிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

குஷ்பு அரசியல் நகர்வுகள்
நடிகையாக இருந்த குஷ்பு ஜெயாடிவியில் தொகுப்பாளராக வேலை செய்த போது அதிமுகவில் இணையப்போவதாக செய்தி வெளியானது. அவர் திடீரென திமுகவில் இணைந்தார். கலைஞர் தொலைக்காட்சியில் சீரியல் தயாரித்து நடித்தார். ஸ்டாலின் தொடர்பாக பேசியது சர்ச்சையாகவே பலத்த எதிர்ப்பு எழுந்தது காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார்.

குஷ்புவின் குமுறல்
காங்கிரஸ் கட்சியில் இணைந்த சில வருடங்களில் அகில இந்திய தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கிடைத்தது என்றாலும் மாநிலத்தில் பெரிதாக கட்சி உறுப்பினர்களிடம் மரியாதை இல்லை மதிப்பும் இல்லை. கடந்த ஓராண்டுகாலமாகவே மனதிற்குள் குமுறிக்கொண்டிருந்த குஷ்பு.

அதிரடி ட்வீட் போட்ட குஷ்பு
பாஜகவிற்கு எதிராக கடுமையாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார் குஷ்பு. அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக பாஜகவின் ஆதரவு நிலையை எடுத்தார். புதிய கல்விக்கொள்கை பற்றி பாஜகவிற்கு ஆதரவாக பதிவிட்ட குஷ்புவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

குரு பெயர்ச்சியும் குஷ்பு பெயர்ச்சியும்
காங்கிரஸ் கட்சியில் சில ஆண்டுகள் வரை சஞ்சரித்து வந்த குஷ்பு தனக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்காத கட்சியில் பயணம் செய்வதை விட மதிப்பும் மரியாதையும் கொடுத்து அழைக்கும் கட்சிக்கு சென்று விடலாம் என்று இப்போது இடப்பெயர்ச்சி ஆகியுள்ளார். குரு பெயர்ச்சிக்கு முன்னதாகவே குஷ்பு பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது.

சோனியாவிற்கு கடிதம்
டெல்லி செல்வதற்கு முன்பாகவே சோனியாகாந்திக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார் குஷ்பு. மிக நீண்ட யோசனைக்குப்பிறகு கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ள குஷ்பு, மக்கள் அங்கீகாரம் இல்லாத தலைவர்கள் தன்னை அடக்கி வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சோனியா மீது மதிப்பு எப்போதும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.

குஷ்பு சாதிப்பாரா
குஷ்பு மாநில கட்சியான திமுகவில் இருந்து தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது தாய் வீட்டிற்கு வந்தது போல உணர்வதாக கூறியிருந்தார். இப்போது தனது கொள்கைக்கு நேர் எதிராக உள்ள பாஜகவில் இணையப்போகும் குஷ்பு அங்கு எழப்போகும் தடைகளை உடைத்து சமாளிப்பாரா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications