குட் நியூஸ்! கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் தலைகளா.. எப்போது இருக்கும்.. முக்கிய அப்டேட்!
சென்னை: பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். இது 1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியின் உத்தரவின்பேரில் கட்டுமானம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயரிட்டிருந்தார். இந்த இடத்தில் 160 பிளாட்பார்ம்கள் உள்ளன. இதன் பட்ஜெட் 103 கோடி ரூபாய் ஆகும். இதன் பரப்பளவு மொத்தம் 36.5 ஏக்கர் ஆகும். இந்த பேருந்து நிலையத்தில் லாக்கர் ரூம்கள், ஹோட்டல்கள், சிறிய உணவு கடைகள், ஏடிஎம்கள், 10 டிராவல் ஏஜென்சி அலுவலகங்கள், தங்கும் இடங்கள் உள்ளன.
என்னதான் இத்தனை வசதிகள் இருந்தாலும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி வந்தது. அதிலும் தென் தமிழகம் செல்லும் பயணிகள் கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்தை ஊர்ந்து சென்று சொந்த ஊர்களுக்கு போவதற்குள் போகும் போகும் என்றாகிவிடுகிறது. இதனால் அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கின.
இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. சில மழைநீர் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் திறப்பு விழா தாமதமாகிறது. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இது கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட பெரியது. அதாவது 88 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தென் தமிழகமான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சை, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையத்தின் மதிப்பு ரூ 393 கோடியாகும்.
போன பொங்கல் பண்டிகையின் போதே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கையாக சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு தாக்கல் செய்திருந்தனர். அது போல் பிரெய்லி எழுத்துகளும் அங்கு பொறிக்கப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது ரெடியாக இருந்தாலும் கோர்ட் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் மட்டுமே 100 சதவீதம் நிறைவு பெற்றதாக கூறமுடியும்.
எனவே இப்போதைக்கு இதன் திறப்பு விழா நடக்காது என கருதப்பட்டது. இந்த கோர்ட் சொன்ன உத்தரவுகளுக்கு செயல்வடிவம் கொடுத்த பிறகுதான் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தண்டையார்பேட்டையில் வள்ளலார் 200 முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட சேகர் பாபு கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் 40 சதவீதம் தான் முடிந்துள்ளது.
இன்று 95 சதவீத பணிகள் நிறைவற்று இருந்தாலும், சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கக் கூடிய நிலை உள்ளது. அதே போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முகப்பு, பூங்கா, காவல் நிலையம், மருத்துவமனை என உள்கட்டமைப்புகள் சரிவர அமைக்கப்படவில்லை. 8 கி.மீ. அளவிற்கு தார்சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். எனவே அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது இந்த பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications