வடகிழக்கு பருவமழையால் 2 பேர் மரணம்..தலா.ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்த அமைச்சர் ராமச்சந்திரன்
சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாகவே சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெருமழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
கனமழை காரணமான அம்பத்தூர் மண்டலம் 7 க்கு உட்பட்ட கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் 5 க்கும் மேற்பட்ட தெருகளில் சுமார் 2 அடி மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போய் உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் வெள்ளம்
கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட தரை தளத்தில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
மழைநீர் வீடுகளில் புகுந்துள்ளதால் வீடுகளில் உள்ள கட்டில் பீரோ உள்ளிட்ட உடமைகள் நீரில் மிதக்கின்றன.
ஒவ்வொரு மழைக்கும் இதேபோல் தான் இப்பகுதியில் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

அம்பத்தூரில் வெள்ளம்
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருந்து அதிக அளவு மழை நீர் கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியர் பகுதியில் அமைந்துள்ள கேனல் வழியாக வெளியேறி வருவதால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி மண்டலம் 7 அம்பத்தூர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை நீரை அகற்ற புகார் எண்
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், புதுப்பேட்டை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குடியிருப்பு, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, புகார் தெரிவிக்க சென்னை பெருநகர மாநகராட்சி அவசர உதவி எண் அறிவித்துள்ளது. புதுப்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வடிகால் வழியாக தண்ணீர் வெளியேறினாலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது என புகார் தெரிவித்தனர்.

மழைக்கு 2 பேர் மரணம்
கனமழை காரணமாக சென்னை புளியந்தோப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். புளியந்தோப்பு பிரகாஷ்ராவ் காலனியைச் சேர்ந்த சாந்தி, 46 என்பவர் வீட்டில் இருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திங்கட்கிழமை இரவு வியாசர்பாடி பகுதியில் தேவராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் மழை நீரில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி உயிழந்தார். சென்னையில் மழை காரணமாக இருவேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் ஆய்வு செய்ய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், வடகிழக்கு பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்று கூறினார். பருவமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ. 4 லட்சம் இழப்பீடு
மாநில பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். வடசென்னை தாழ்வான பகுதி என்பதால் மழை பாதிப்பு வழக்கமாக உள்ளது, இருப்பினும் நீரை அகற்றும் பணி துரிதமாக நடக்கிறது என்று தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையார் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார். எந்த இடங்களில் பிரச்சனை இருந்தாலும் உடனே அதிகாரிகளை அனுப்பி வைப்போம் என்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications