முட்டிக்கு மேல் தண்ணீர்.. மேடு பள்ளம் தெரியாத அளவுக்கு ஈக்காட்டுத்தாங்கலில் வெள்ளம்!
சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வடசென்னையில் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளது.
வடசென்னை மற்றும் மத்திய சென்னையில் 2015 க்கு பிறகு காணாத மழை வெள்ளம் தற்போது ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் சென்னையில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பகுதிகள்
வீடுகளுக்குள் புகுந்த நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் வீட்டில் வசிப்போர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, திநகர், அசோக் நகர், மடிப்பாக்கம், மயிலாப்பூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.

பேருந்து நிலையம்
ஈக்காட்டுத்தாங்கலில் பேருந்து நிலையம் அருகே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அம்பாள் நகர் அருகே நிறைய மேன்ஷன்கள் இருப்பதால் அந்த தெருக்களில் போக போக தண்ணீரின் அளவு அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த மழைக்கே இப்படி என்றால் இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டால் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஹோட்டல்கள்
மேன்ஷன்களில் இருப்போர் உணவுக்காக வெளியே உள்ள ஹோட்டல்களை நாடும் நிலை உள்ளது. டீ, காபி குடிக்க வேண்டுமென்றாலும் வெளியே வர வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் அந்த மழை நீரில் நீந்தி வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிற்கக் கூட இடமில்லாத அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது.

மழைநீர்
ஈக்காட்டுத்தாங்கல் பேருந்து நிலையம் அருகே மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் பேருந்துகளில் ஏறுவதற்கு சிரமமான நிலை உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லை. ஆனால் நாளை திங்கள்கிழமைக்குள் மழை நீரை அகற்றாவிட்டால் மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.












Click it and Unblock the Notifications