ஆகா.. சசிகலாவை "அங்கேயே" கூட்டிட்டு போக போறாங்களாம்.. அதிரப்போகும் கோடநாடு.. கையை பிசையும் புள்ளி!
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்து வரும் நிலையில் சசிகலாவிடம் வேறு விதமான சில விசாரணைகளை மேற்கொள்ள தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இதில் 5 தனிப்படை போலீசார் வெவ்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை போலீசின் ஒரு பிரிவு இரண்டு நாட்களாக சென்னையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தி வந்தது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடந்தது.
“கோடநாடு பங்களா கோவில்” யாராக இருந்தாலும் தண்டிக்கனும்! சசிகலா உருக்க அறிக்கை ! இத கவனிச்சீங்களா?
சசிகலா விசாரணை
இந்த வழக்கில் பொதுவாக குற்றவாளிகள் எல்லோரையும் நேரில் வரவைத்துதான் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சசிகலாவிற்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டு நேரடியாக அவரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. சசிகலாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சசிகலாவிடம் மொத்தம் 9 மணி நேரம் இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது.
சசிகலா
சசிகலாவிடம் கிட்டத்தட்ட 500 கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விகள் பலவற்றிற்கு சசிகலா நேரடியாக பதில் வழங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சில கேள்விகளுக்கு மட்டும் தெரியாது, நினைவு இல்லை என்று சசிகலா பதில் அளித்து இருக்கிறாராம். மொத்தத்தில் சசிகலா இந்த விசாரணைக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார் என்றே போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. முக்கியமாக சசிகலாவிடம் கோடநாடு வழக்கில் மரணம் அடைந்தவர்களின் எத்தனை பேரை உங்களுக்கு தெரியும்? கோடநாடு பங்களாவில் என்னென்னெ இருந்தது? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஜெயலலிதா முக்கிய கோப்பு
மேலும் ஜெயலலிதாவின் முக்கிய கோப்புகள் பங்களாவில் இருந்ததா?, கோடநாடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? கொலை பற்றி உங்களிடம் முதலில் சொன்னது யார்? அவருக்கு எப்படி அந்த தகவல் தெரியும்? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டு இருக்கிறது. இது போக இந்த கொலையில் பலியானார்கள் பற்றியும் சசிகலாவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளது.
அக்கா வாழ்ந்த இடம்
இது பற்றி சசிகலா வெளியிட்ட அறிக்கையில் என் அக்கா அவர்கள் மிகவும் நேசித்த இடம். அவர்களுக்கு நிறைய மன அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுத்த ஒரு இடம் உண்டு என்றால் அது கோடநாடுதான். இந்த சம்பவத்தில் எங்களின் காவலர், ஒரு பிஞ்சு குழந்தை, ஒரு பெண் உட்பட பலர் பலியாகி உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று சசிகலா குறிப்பிட்டார்.
புதிய கோடநாடு
இந்த நிலையில்தான் வழக்கில் புதிய திருப்பமாக சசிகலாவை நேரடியாக கோடநாட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அங்கே அழைத்து சென்றால்தான் என்னென்ன காணாமல் போய் இருக்கிறது. என்னென்ன சரியாக இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இதனால் சசிகலாவை நேரடியாக அங்கே அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
எல்லாம் சரியாக இருந்ததா?
வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்று உள்ளே எல்லாம் சரியாக இருக்கிறதா, என்னெவெல்லாம் காணாமல் போய் இருக்கிறது என்று விசாரிக்க உள்ளனர். அறைகள் தொடர்பான விவரங்கள் குறித்து கேள்வி எழுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஏனென்றால் சிறையில் இருந்து வெளியே வந்த பின் சசிகலா கோடநாடு எஸ்டேட் செல்லவே இல்லை. அவர்தான் இதன் உரிமையாளர் என்பதால் நேரடியாக அங்கு நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
முக்கிய புள்ளி
இது போக இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமும் மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான சேலம் இளங்கோவனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இளங்கோவன் தரப்பு கையை பிசைந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் இவர் விசாரணை வளையத்தில் மட்டுமே இருக்கிறார். வேறு ஒரு முக்கிய புள்ளி இன்னும் சில நாட்களில் விசாரிக்கப்படுவார் என்றும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த புள்ளி யார் என்பதுதான் மர்மமாக இருக்கிறது.