கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் திடீர் பரபரப்பு- எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரி புதிய மனு!
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி உள்ளிட்டோரை விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எடப்பாடியை விசாரிக்க கோரி மனு
இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வ்ழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

தள்ளுபடி செய்தது நீலகிரி கோர்ட்
இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை ஹைகோர்ட்டில் மறு ஆய்வு மனு
அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கடும் எதிர்ப்பு
ஏற்கனவே கோடநாடு வழக்கில் தம்மை சிக்க வைக்க சதி நடக்கிறது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்துள்ளார். மேலும் சட்டசபையில் இதுபற்றி பேசுவதற்கும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரி ப்புதியதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது கூடுதல் பரபரப்பை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications