“எங்கள் முதல்வர்” என முழக்கமிட்டு வரவேற்ற கொளத்தூர் மக்கள்! நெகிழ்ந்த மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்திருப்பது, திமுகவினரிடையே மட்டுமல்லாது தவெகவினர் மத்தியிலும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தொகுதி மக்களுக்கு நன்றி கூற, ஸ்டாலின் இன்று மாலை கொளத்தூர் சென்றார். அங்கு தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு பரவலாக வரவேற்றிருக்கின்றனர்.
இந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டிருந்த வி.எஸ்.பாபு, சுமார் 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 3 தேர்தல்களில் ஸ்டாலின் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர் ஆயிரம் விளக்கு தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றிருந்தார். இருப்பினும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் இந்த முறை தோல்வியடைந்தது அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மொத்தமாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் சேப்பாக்கம் மற்றும் துறைமுகம் என வெறும் 2 தொகுதிகளில் மட்டும்தான் திமுக ஜெயித்திருக்கிறது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் தவெகதான் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.
கொளத்தூரை பொறுத்தவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதல்வர் படைப்பகம், மாதிரிப் பள்ளி, குடிமைப் பணி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக இலவசப் பயிற்சி மையங்கள், பெரியார் நகர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தியது, மழைநீர் வடிகால் கட்டமைப்பு, சமூக நலக்கூடம், நவீன வணிக வளாகம் இப்படி பல திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வந்திருந்தார்.

ஆனால், இதில் எதுவும் சாமனிய மக்களுடன் கனெக்ட் ஆகவில்லை. இன்னமும் வேலையில்லா இளைஞர்கள் ஒரு நாளைக்கு ரூ.400க்கும், ரூ.500க்கும் ரேபிடோ போன்ற கிக் தொழிலாளியாகத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற வேலைகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலை பாதுகாப்பு கிடையாது, மிக மிக குறைந்தபட்ச ஊதியம், அரசு பேருந்துகள் போதுமான எண்ணிக்கையில் இயக்கப்படாதது என ஏகப்பட்ட பிரச்சனைகள் அப்படியேதான் இருந்தன.
இதெல்லாம் மக்களிடையே அதிருப்தியாக இருந்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் தவெக களத்தில் இறங்கியிருந்தது. தமிழ்நாடு முழுவதும் தவெக அலை வீசிய நிலையில், அதில் கொளத்தூரும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும், தனக்கு வாக்களித்தவர்களுக்காக நன்றி கூற மு.க.ஸ்டாலின் இன்று மாலை கொளத்தூர் சென்றிருந்தார். திமுக செய்த தவறை தவெக செய்யும் எனில், விஜய்க்கும் இதே நிலைதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
நெகிழந்து போன ஸ்டாலின்
கொளத்தூர் வந்த ஸ்டாலினுக்கு, "எங்கள் முதல்வர் ஸ்டாலின்" என்று முழக்கமிட்டு மக்கள் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். ஸ்டாலின் தோல்வியடைந்ததால், சேகர்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கண் கலங்கியிருந்தனர்.












Click it and Unblock the Notifications